விருதுநகரில் விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்க காரணம் என்ன? ராதிகாவுக்கு சரிவு ஏன்?
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் விஜய பிரபாகரன் 64,332 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக சார்பில் களம் காணும் ராதிகா சரத்குமார் 3ஆவது இடத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். விஜய பிரபாகரன் பெற்ற வாக்குகளில் 50 சதவீதத்தை கூட அவர் பெறவில்லை.
விருதுநகர் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்று மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதோடு நான்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக திமுக நியமித்திருந்தது. அந்த வகையில் விருதுநகரில் தங்கம் தென்னரசுவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விருதுநகரில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவர் பிறந்த மண்ணில் மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறக்கப்பட்டார். விஜயகாந்த் போலவே விஜய பிரபாகரன் இருப்பதால் அவருக்கு அந்த தொகுதி மக்களின் அன்பும் அரவணைப்பும் கிடைத்தது. திமுக கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இரு முறை அந்த தொகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.
தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெல்வார் என கணித்திருந்தன. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடத்தில் மாணிக்கம் தாகூரும், மூன்றாவது இடத்தில் ராதிகாவும் உள்ளனர். விருதுநகரில் விஜய பிரபாகரன் 73,622 வாக்குகளையும் மாணிக்கம் தாகூர் 68,455 வாக்குகளையும் ராதிகா 27240 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விஜயகாந்த் மகன் வாங்கிய வாக்குகளில் பாதி வாக்குகளை கூட ராதிகா வாங்கவில்லை.
இந்த விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும் ராதிகாவும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்தலில் மாணிக்கம் தாகூருக்கு விஜய பிரபாகரன் டஃப் ஃபைட் கொடுத்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் வெல்கிறாரோ இல்லையோ ராதிகா சரத்குமாரை விஜய பிரபாகரன் வெல்வார் என தெரிகிறது.
முதல்முறையாக போட்டியிடும் விஜய பிரபாகரன் இத்தனை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்க காரணம் என்ன தெரியுமா? விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் பிறந்தவர். விஜயகாந்த் இறந்த போது அவருடைய இறப்புக்கு வந்த கூட்டத்தினர் வாக்கு போட்டிருந்தாலே விஜயகாந்த் தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்திருப்பார் என சொல்லப்பட்டது.
அந்த அளவுக்கு அவருடைய இறப்புக்கு கூட்டம் கூடியது. அது போல் விஜயகாந்த் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். விருதுநகரில் நாடார்களை போல நாயுடு சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். விஜயகாந்தின் அனுதாப வாக்குகளும் இந்த சமூக வாக்குகளும் விஜய பிரபாகரனுக்கு கிடைத்திருக்கும் என தெரிகிறது.
அது போல் ராதிகாவின் கணவர் சரத்குமார் நாடார் சமூகத்தை சேர்ந்தவர், ராதிகாவோ நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இரு சமூக வாக்குகளும் ராதிகாவுக்கு கிடைக்கும் என கணக்கு போட்டு அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ராதிகா போட்டியிடுவதோ பாஜக சார்பில் என்பதால் மக்கள் ராதிகாவுக்கு அந்தளவுக்கு வாக்களிக்க முன் வரவில்லை என தெரிகிறது.












Click it and Unblock the Notifications