கடையை எப்போ சார் திறப்பீங்க.. நள்ளிரவில் டாஸ்மாக் ஊழியரை பதற வைத்த மதுபிரியர்..விடிந்ததும் ட்விஸ்ட்
விருதுநகர்: வடிவேலு பட பாணியில் விருதுநகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடை ஊழியருக்கு நள்ளிரவில் போன் செய்து, "சார்.. கடையை எப்ப சார் திறப்பீங்க.." என்று கேட்டுள்ளார். அதற்கு நாளை காலையில் திறப்போம் என்றதும் போனை வைத்துவிட்டார். பின்னர் மீண்டும் அந்த நபர் போன் செய்து, "சார்.. கடையை எப்போ சார் திறப்பீங்க.." என்று மறுபடியும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர் விடிந்ததும் கடைக்கு சென்று திறந்து பார்த்துள்ளார்.
நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் டாஸ்மாக் கடை உள்ளே இருந்து கொண்டு டாஸ்மாக் கடை ஓனருக்கு போன் செய்து, "ஒயின்ஷாப் கடை ஓனருங்களா.. சார்.. கடைய எப்போ சார் திறப்பீங்க.." என்று கேட்பார். அதற்கு அவர் காலையில் தான் திறப்போம் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவார். மீண்டும் ஒருமுறை போன் செய்து மறுபடியும், ஒயின்ஷாப் கடை ஓனருங்களா.. கடை எப்போ சார் திறப்பீங்க என்று கேட்பார்.

அப்போது அவர் கோபத்துடன் காலையில் தான் திறப்போம் என்று சொல்ல, வடிவேலுவோ அப்போ நான் எப்போது வெளியே செல்வது என்று கேட்பார். இதையடுத்து தான் தெரியும் அவர் கடையில் திருட வந்திருக்கிறார் என்று. இதேபோன்று தான் தற்போது விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஊழியருக்கு நடந்துள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை இரவில் பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் ஊழியர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம ஆசாமி, சார்.. கடைய எப்போ சார் திறப்பீங்க என்று கேட்டுள்ளார். இதற்கு கடை ஊழியர் நாளை காலை 11 மணிக்கு என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே ஆசாமி போன் செய்துள்ளார். போனை எடுத்து பேசிய போது, சார்.. கடைய எப்போ சார் திறப்பீங்க என்று கேட்டுள்ளார். ஆஹா.. இது அதுல்ல.. என்று கடை ஊழியருக்கு வடிவேலு பட காட்சி நினைவுக்கு வந்துள்ளது. நாம் தான் இரவு கடையை அடைக்கும் போது தெரியாமல் யாரையும் உள்ளே வைத்து அடைத்துவிட்டு வந்துவிட்டோமோ என்று பயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விடிந்தும் விடியாமலும் எழுந்த கடை ஊழியர், காலை 7 மணிக்கே சென்று கடையை திறந்து பார்த்தார். ஆனால் உள்ளே யாரும் இல்லை. அப்போது கடைக்கு வெளியில் ஒரு ஆசாமி மதுபோதையில் படுத்து கிடந்தார். அவர் அருகே ஒரு போனும் கிடந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் தன் செல்போனுக்கு வந்த எண்ணுக்கு கால் செய்துள்ளார். இதில் வெளியில் மதுபோதையில் கிடந்த நபர் தான் தனக்கு போன் செய்தார் என்பதை உறுதி செய்துகொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் தெரிந்தது.












Click it and Unblock the Notifications