சூடிக்கொடுத்த சுடர்க்கொடி: இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்.. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை!
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூர தேரோட்டம் காலை 8.05 மணிக்கு தொடங்குகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி நடக்கும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா சிறப்பு பெற்றது.

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர விழாவுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி கருட சேவை நடைபெற்றது. நேற்று முன்தினம் 7ஆம் திருவிழாவையொட்டி இரவில் ஆண்டாள் - ரெங்கமன்னார் சயன சேவை நடைபெற்றது.
ஆடிப்பூர விழாவில் மிக முக்கியமான நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இன்று அதிகாலை ஆண்டாள் ரெங்மன்னார் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கீழ ரத வீதிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்வர். இன்று காலை 8.05 மணிக்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் தொடங்குகிறது.
மேலும் ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூலை 22) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் கோவில் தேரோட்டத் திருவிழா நடைபெறுவதால் இன்று விருதுநகர் மாவட்டம் முழுக்க பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications