கோயிலுக்குள் நுழைந்து கோலங்களை அழிக்க உரிமை கிடையாது.. தேர்தல் ஆணையத்துக்கு ஜீயர் கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயிலில் நுழைந்து கோலத்தை அழிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் நுழைவுவாயில் மற்றும் உள் பிரகாரத்தில் ஓவியங்கள் மற்றும் தாமரை கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் வரையப்பட்டிருந்தன.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் நேற்று கோயிலுக்கு வந்தார்கள். வரையப்பட்டிருந்த தாமரை உள்ளிட்ட பூக்கள் ஓவியங்களை கண்டனர். அதில், தாமரைப்பூக்கள் பாஜகவின் சின்னம் என கருதியதால் அதனை அழிக்குமாறு கூறினர்.

பக்தர்கள் அதிர்ச்சி
இதையடுத்து, சுண்ணாம்பு கலவை கொண்டு அந்த தாமரை ஓவியங்கள் அழிக்கப்பட்டன. பிறகு உடனடியாக வேறு ஓவியங்கள் அதே இடத்தில் வரையப்பட்டன. தாமரை கோலங்கள் அழிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உரிமை இல்லை
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சொன்னதாவது: "தாமரை என்பது தாயாரின் அவதார பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

பெயிண்ட் கோலம்
பிறகு கோயிலுக்குள் ஓவியங்கள் அழிக்கப்பட்டது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சிவஞானம் சொல்லும்போது, "கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லைதான்.

உள் நோக்கம் இல்லை
போடப்பட்ட கோலத்தில் சின்னங்கள் இருப்பதாக போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனரே தவிர அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. இருந்தாலும் ஆண்டாள் கோவிலில் தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம். இதில் எந்த உள்நோக்கம் எதுவும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications