விஜயகாந்த் மகன், ராதிகா நின்றாலும் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூருக்கே வெற்றி வாய்ப்பு?
விருதுநகர்: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், நடிகை ராதிகா ஆகியோர் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தாங்கள் சார்ந்த கட்சிகள் சார்பில் போட்டியிட்டாலும், இந்தத் தொகுதியை பொறுத்தவரை "இந்தியா" கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கள நிலவரங்கள் சொல்கின்றன..
விருதுநகர் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி. காமராஜர் பிறந்த மண். தமிழகத்தின் மளிகை வியாபாரத்தை நிர்ணயிக்கிறது, எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு கொள்முதலின் மையமாக உள்ளது. மானாவாரி விவசாயத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.. இதனால் சிறுதானியப் பயிர் உற்பத்தி அதிக அளவில் இருக்கிறது.. விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீப்பெட்டி ஆலைகளும், அச்சக ஆலைகளும் உள்ளன.

இங்கு பல்வேறு தொழில்கள் இருந்தாலும், அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர் போன்ற பகுதிகளில் 100 நாள் வேலை உள்பட மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருப்பரங்குன்றனம், திருமங்கலம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகியவை மதுரை மாவட்டத்தில் உள்ளன.
விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை வெற்றிபெற்ற மாணிக்கம் தாக்கூர, சிட்டிங் எம்பி என்ற அந்தஸ்துடன் மீண்டும் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரைப் பிரபலமான ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கெளசிக் ஆகியோர் போட்டியில் இறங்கி உள்ளனர்
திரைபிரபலமான ராதிகா பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டாலும், அதிமுக கூட்டணி சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நின்றாலும், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூருக்கே சாதகமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதுபற்றி அவர்கள் கூறும் போது, மாணிக்கம் தாகூரை பொறுத்தவரை புதுமுகம் இல்லை. மக்களிடையே அவருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. இதேபோல் பெரிய அளவில் எந்த விமர்சனங்களும் மாணிக்கம் தாகூர் மேல் எழவில்லை.
இதுதவிர தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை அதிகமாக இருக்கிறது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கி உள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் காலம் முதலே கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதேபோல் மதிமுகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது.. இவை எல்லாம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கூடுதல் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
விருதுநகரில் கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 470,883 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 316,329 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த முறை மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். எனவே கடந்த முறையை போலவே இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
மாணிக்கம் தாகூர் M.Pயாக விருதுநகரில் செய்த பணிகளை மாவட்ட காங்கிரஸ் நல்லவர் செய்த "நானூறு நன்மைகள்" என்று புத்தகமாக அடித்து வெளியீட்டு உள்ளது பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், ஏழை பெண்களுக்கு 1 லட்சம், மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, NEET பரீட்சைகள் விலக்கு போன்ற அறிவிப்புகளும், மேலும், இந்தியா முழுவதுமே ராகுல் காந்திக்கு ஆதரவு அலை உருவாகியுள்ளது போன்றவையும், மாணிக்கம் தாகூரின் வெற்றியை உறுதி செய்கிறது.












Click it and Unblock the Notifications