சசிகலா புஷ்பா கார் மீது நள்ளிரவு தாக்குதல்... சமயோஜிதமாக செயல்பட்ட ஓட்டுநரால் உயிர் தப்பினார்..!
விருதுநகர்: முன்னாள் எம்.பி.யும், பாஜக பிரமுகருமான சசிகலா புஷ்பா சென்ற கார் மீது நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த சசிகலா புஷ்பாவை, டூ வீலரில் பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறது.

தூத்துக்குடி பயணம்
தூத்துக்குடி முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா நேற்றிரவு மதுரையிலிருந்து தனது கார் மூலம் தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று காரின் பின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

வேகமெடுத்த கார்
இதனால் சசிகலா புஷ்பா அலறிய நிலையிலும், கார் ஓட்டுநர் பதற்றப்படாமல் அங்கு காரை நிறுத்தாமல் ஆக்ஸ்லேட்டரை ஓங்கி மிதித்து அந்த இடத்தை வேகமாக கடந்துள்ளார். காரை பின் தொடர்ந்து சென்ற டூவிலர் நபர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் செல்லமுடியவில்லை. இதனிடையே இது குறித்து காரில் பயணித்தவாறே காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சசிகலா புஷ்பா புகார் அளித்தார்.

காவல்துறை
அந்தப் புகாரின் பேரில் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதிக்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சசிகலா புஷ்பா மீது தாக்குதல் நடத்தப்பட்டது எதேச்சையாக கொள்ளையடிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதா அல்லது முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவிர்ப்பு
இதனிடையே ஓட்டுநர் கொஞ்சம் பதற்றமடைந்து காரை நிறுதியிருந்தால் கூட என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தளவுக்கு டூ விலரில் சென்ற இரண்டு நபர்களும் காரை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications