50 ஆண்டுகளாக மக்கள் சலிக்காமல் எனக்கு ஓட்டு போடுகிறார்கள்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறிய ருசிகரம்
தன்னை பற்றி பெருமை பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
விருதுநகர்: இந்தக் காலத்தில் கணவன் மனைவி இடையேயான திருமண வாழ்க்கையே 2 ஆண்டுகளில் சலிப்பு தட்டிவிடும் நிலையில், தனக்கு 50 ஆண்டுகளாக மக்கள் சலிக்காமல் ஓட்டுப் போட்டு வருகிறார்கள் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியிருக்கிறார்.
''யாரோ ஒரு முகம் தெரியாத ஆளுக்கு ஓட்டுப்போடுவதை விட முகம் தெரிந்த அண்ணாச்சிக்கு ஓட்டுப் போடலாம்'' என மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைப்பதாக பெருமை பேசினார்.
அண்மையில் கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் ஒருவரை தலையில் அடித்து சர்ச்சையில் சிக்கியவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம்
எம்.ஜி.ஆரே. முதலாளி என அழைக்கும் அளவுக்கு அதிமுகவில் அதிகாரமிக்க நபராக வலம் வந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவுக்கு தாவினார். திமுகவிலும் அவருக்கு உரிய மரியாதை கருணாநிதி காலம் தொட்டு இன்று வரை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இவரை கட்சியினரும், விருதுநகர் மாவட்ட மக்களும் அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள்.

மக்கள் சலிக்கவில்லை
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்கள் வட்டிக்கு விடக்கூடாது என்றும் அதை வைத்து சுய தொழில் புரிய வேண்டும் என்றும் பாடமெடுத்தார். அதேபோல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் சலிப்பு
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ''இந்தக் காலத்தில் கணவன் மனைவி இடையேயான திருமண வாழ்க்கையே 2 ஆண்டுகளில் சலிப்பு தட்டிவிடுவதாகவும், திருமணமான புதிதில் சினிமாவுக்கு போகலாம், அங்கே போகலாம் இங்கே போகலாம் என கவனிப்பு பலமாக இருக்கும் என்றும் போக போக அப்படியே இது குறைந்து 2 ஆண்டுகளில் சலிப்பு வந்துவிடும்'' எனவும் தெரிவித்தார்.

மக்கள் சலிக்காமல்
ஆனால் இப்படிப்பட்ட சூழலிலும் 50 ஆண்டுகளாக தனக்கு மக்கள் சலிக்காமல் ஓட்டுப் போட்டு வருகிறார்கள் என்று பெருமை பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ''யாரோ ஒரு முகம் தெரியாத ஆளுக்கு ஓட்டுப்போடுவதை விட முகம் தெரிந்த அண்ணாச்சிக்கு ஓட்டுப் போடலாம்'' என்பதால் மக்கள் தன்னை தொடர்ந்து வெற்றிபெற வைக்கிறார்கள் எனத் தெரிவித்தார். சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆகிய 2 தொகுதிகளில் இவர் பல முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications