ராதிகாவை பார்த்து காரை நிறுத்திய அமைச்சர்.. கைக்குலுக்கியதும் விருதுநகர் எம்பி தந்த ஹைலைட் ரியாக்சன்
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவை பார்த்ததும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது காரை விட்டு இறங்கி வந்து அவரிடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வேளையில் பக்கத்தில் நின்ற காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான மாணிக்கம் தாகூர் கொடுத்த ரியாக்சன் கவனம் ஈர்த்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. நாளை மறுநாள் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

இந்நிலையில் தான் இன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி விருதுநகர் லோக்சபா தொகுதியிலும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
விருதுநகர் தொகுதியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆவடிதோப்பு பகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகாவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதனை ராதிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் காரில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஆவடிதோப்பு பகுதியில் ராதிகாவை பார்த்தனர். ராதிகாவும் அவர்களை பார்த்தார். இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது காரை நிறுத்தி கீழே இறங்கினார். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் காரில் இருந்து இறங்கினார்.
இவர்கள் 3 பேரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த வேளையில் ராதிகாவிடம் கைக்குலுக்கிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அருகே நின்ற விருதுநகர் எம்பியும், மாணிக்கம் தாகூர் எம்பியும் சிரித்தபடி நின்றார். இது இருகட்சியினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications