நாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்!
போலீஸ்காரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்
விருதுநகர்: பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் கங்காதரன் திடீரென வாந்தி எடுத்து.. இறந்தே போனார்! நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, விஷத்தை சாப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்தவர் ரா.கங்காதரன். 31 வயதாகிறது.

தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 120 பேர் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக பஸ்களில் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு பஸ்ஸில் வந்த கங்காதரனும் வந்து கொண்டிருந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென கங்காதரன் வாந்தி எடுத்தாராம். இதனால் உடன் இருந்த சக காவலர்கள் பதறி அடித்து கொண்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கங்காதரன் உயிரிழந்தார். இது சம்பந்தமான விசாரணையில், கங்காதரன் விஷத்தை சாப்பிட்டுள்ளார் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

ஆனால் எதற்காக என்று உடனடியாக தெரியவில்லை. பணிச்சுமையா, குடும்ப பிரச்சனையா, எதனால் கங்காதரன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி தேர்தல் பணிக்கு சென்றபோது, போலீஸ்காரர் இப்படி விஷமருந்தி உயிரிழந்தது காவல்துறை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications