அதிமுகவினர் ஓட்டுக்கேட்டு வராதீர்… விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு... பரபரப்பு போஸ்டர்
விருதுநகர்: அதிமுகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் தங்களது வீடுகளில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் களம் அனல் பறக்கும் சூழ்நிலையில், ஆங்காங்கே வேட்பாளர்களுக்கும், குறிப்பிட்ட கட்சியினருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றம் வந்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில், நடிகர் விஜய் அவ்வப்போது மேடைகளில் அரசியல் பேசி வருவது, அவரது ரசிகர்களிடையே அரசியல் ஆர்வத்தை தூண்டி வருவதாக கூறப்படுகிறது.
ஆஹா.. இது அதுல்ல.. ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி.. கலக்கத்தில் அதிமுக கூட்டணி!
ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை விவகாரத்தில், திமுக கூட்டணி கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சர்கார் பட சர்ச்சை
சர்கார் படத்தில், அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் பட பேனர்களை கிழித்தெறிந்தனர். சில இடங்களில் தியேட்டர்களையும் அடித்து நொறுக்கினர். இதனால், விஜய் ரசிகர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டன.
விஜய் ரசிகர்கள் இல்லம்
வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது தளபதி ரசிகன் இல்லம். அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சர்கார் பட விவகாரத்தின் போது அதிமுகவினர் மேற்கொண்ட போராட்டங்களை முன்வைத்து, அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மகளிரணித் தலைவி
இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி, சர்கார் பட ரிலீஸ் சமயத்தில் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் சொந்த செலவில் வைத்திருந்த பேனர்களை கிழித்தார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமால் எங்களை கண்ணீர் விட வைத்தார்கள். அச்சம்பவம் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் மறையவில்லை. இதற்காகத்தான் எங்களிடம் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம் என்று நோட்டீஸ் அடித்து வலைதளங்களில் பதிவிட்டேன் என்றார்.
கட்டாயப்படுத்தவில்லை
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் எங்களை இப்படி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதிமுகவினர் செய்த போராட்டத்தால் விஜய் ரசிகர்களுக்கு அக்கட்சி மீது வெறுப்பு வந்துவிட்டது. இப்போதுதான் எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற போஸ்டர்களை சமூகவலைதளங்களிலும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஆதரவு யாருக்கு?
ரசிகர்கள் இவ்வாறு முடிவெடுத்தாலும், நடிகர் விஜய் தன்னுடைய எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. தலைவா பட விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் பேசினர். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக, விஜய் ரசிகர்கள் பிரச்சாரம் செய்த போதிலும், சர்கார் பிரச்சனையை தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். இந்தசூழலில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பிலும் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
நடிகர் அஜித் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அஜித் ஆதரவளிப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மறைமுகமாக கூறியதைத் தொடர்ந்து, தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் எனவும் உடனடியாக நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.