“கோ பேக்” எடப்பாடி.. மறவர் கூட்டமைப்பின் “பரபர” போஸ்டர்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது
விருதுநகர்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 'தாமரை’.. சிக்னல் காட்டிய மதுரை ர.ரக்கள்.. ஓபிஎஸ் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..!?
எடப்பாடி பயணம்
இந்த நிலையில் இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகாசி, மதுரை
இதனை தொடர்ந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு அவர் புறப்படுகிறார். 5 மணியளவில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.
பரபரப்பு போஸ்டர்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வருகையை எதிர்த்து அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பு என்ற பெயரில் விருதுநகர் - திருமங்கலம் சாலையின் இருபுறங்களிலும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 20% இடஒதுக்கீட்டில் 68 சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட 115 சாதியினர் வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5% அளித்த எடப்பாடி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர் என போஸ்டர் ஒட்டப்பட்டது.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைது
சாலையின் இருபக்கங்களிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அசம்பாவீதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 22 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்து இருக்கிறது.