அரசு வேலை வேண்டாம்.. அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை தேவை.. கர்ப்பிணியின் கணவர் குமுறல்
Recommended Video
விருதுநகர்: எச்ஐவி தொற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கு அரசு வேலை தேவையில்லை என்றும் மனைவியின் சிகிச்சை தான் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 ரத்த வங்கிகளில் பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.
கர்ப்பிணிக்கு ரத்தம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர். 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.
எச்ஐவி ரத்தம் உறுதியானது
ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், அதை அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மோசமடைந்த உடல்நிலை இந் நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைய, இதையடுத்து அந்த பெண் அதே தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்ஐவி உறுதி செய்யப்பட்டது.
திடுக் தகவல்கள்
விசாரணையில் எய்ட்ஸ் பாதித்தவரின் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்தது எப்படி என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தார். விதிகளின் படி அந்த நபருக்கு அரசு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பணியிடை நீக்கம்
5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைக்கு இந்த முழு விவரங்களும் வெளி வந்துள்ளன. பணியில் அலட்சியம் முடிவில் மருத்துவமனை தரப்பில் விசாரிக்கப்பட்டு, பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். தொடரும் விசாரணையில் மேலும் சில மருத்துவமனை ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவல்நிலையத்தில் புகார்
எச்ஐவி தொற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், எனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இனி எங்கள் குடும்பத்திற்கு அரசுதான் பொறுப்பு என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனக்கு அரசு வேலை தேவையில்லை, மனைவியின் சிகிச்சை தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உயர்தர மருத்துவசிகிச்சை
எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் 8 மாத சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கபடும். கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் போராட்டம்
எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை வழங்க கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் உறவினர்கள் சாத்தூர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.