செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போலீஸ்காரரிடம் செல்போன் பறிக்கப்பட்டதா? என்ன நடந்தது?
விருதுநகர்: திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணித்த ஆயுதப்படை காவலர் இன்று காலையில் விருதுநகர் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். விசாரணையில், தன்னிடம் இருந்த செல்ஃபோனை பறித்துவிட்டு சிலர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக போலீஸ்காரர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் போதையில் ரயிலிலில் இருந்து கீழே விழுந்துவிட்டு நாடகம் ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார் (வயது 29). இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஆகும். இந்த நிலையில் ஜெயக்குமார் நேற்று தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவர் ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்துள்ளார். ரயிலில் படியில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் ஜெயக்குமார் விழுந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கண் விழித்த ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் என்னிடம் இருந்த செல்போன், மணிபர்சை பறித்துவிட்டு, சிலர் என்னை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக கூறினார். செல்ஃபோனுக்காக ஓடும் ரயிலில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக போலீஸ்காரர் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரயில்வே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் காவலர் ஜெயக்குமார் உடைமைகள் திருச்செந்தூர் சென்றடைந்த ரயில் பெட்டியில் மீட்கப்பட்டது. அப்போது அந்த பையில் அவரது செல்ஃபோன் மற்றும் மணிபர்ஸ் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் ஜெயக்குமாரிடம் இருந்து யாரும் செல்போன் பறிக்கவில்லை என்றும், அவரை யாரும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போலீஸ்காரர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாக ரயில்வே போலீசார் கிடிக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், மது போதையில் ரயிலிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டு, செல்போனுக்காக தன்னை சிலர் தள்ளிவிட்டதாக நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications