சாதிப் பெயரை நீக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை! ஸ்ரீவில்லிபுத்தூர் விவகாரத்தில் SC/ST ஆணையம் அதிரடி!
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், வார்டு பெயரிலிருந்து சாதிப் பெயரை நீக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் (SC/ST Commission) விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு அச்சம்தவிர்த்தான் (வார்டு 12). இந்த வார்டின் பெயருடன் இணைந்திருந்த 'பறைசேரி' (Paraseri) என்ற சாதி அடிப்படையிலான பெயரை நீக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது.

அரசு இந்தப் பெயரை நீக்காததைக் கண்டித்து, 2026 சட்டசபைத் தேர்தலை அந்த வார்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
ஆணையத்தின் அதிரடி:
தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள மாநில எஸ்.சி/எஸ்.டி ஆணையம், அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் மற்றும் எழுத்தாளரான இமயம், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், சாதிப் பெயரை நீக்காததற்கான காரணம் குறித்தும், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் வருவாய்த் துறையின்கீழ் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் பெயர்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்க ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இது செயல்படுத்தப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், அதிகாரிகளின் இத்தகைய மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு வரை சென்ற இந்தப் பிரச்சனை, தற்போது ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications