காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால்.. விபரீத முடிவெடுத்து போலீஸ்காரர்.. சிவகாசியில் சோகம்
விருதுநகர்: போலீஸ்காரர் ஒருவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த 25 வயதாகும் வைரமுத்து கடந்த 2022-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஸ்டேசனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

காவலர் வைரமுத்து ஈரோட்டில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்த விவகாரம் எதுவும் தெரியாமல், அவரது பெற்றோர், திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பார்க்க சென்றதுடன்,ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
இந்த பெண் தான் நமது வீட்டிற்கு மணமகளாக வரப்போகிறார் என்று எண்ணிக்கொண்டிருந்த பெற்றோருக்கு அவரது மகன் வைரமுத்து கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வைரமுத்து கூறும் போது, ஈரோட்டில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார்,
இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமுத்துவின் பெற்றோர், இதை பெண் பார்க்கும் போதே இதனை கூறி இருந்தால் திருமணம் நிச்சயம் வரை சென்று இருக்காது அல்லவா? என்று கூறி திட்டி இருக்கிறார்கள்.
இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான வைரமுத்து, கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து சிவகாசிக்கு வந்துள்ளார். தனது வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வைரமுத்துவின் பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவர், வைரமுத்துவை சந்திக்க வந்திருக்கிறார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் வைரமுத்து தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி சத்தம் போட்டார். இதையடுத்து வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வைரமுத்துவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து வைரமுத்துவை மீட்டார்கள்.
பின்னர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், வைரமுத்துவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துபோனதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்த போது தான், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications