ஏசியிலிருந்து எட்டிப்பார்த்த கொம்பேறி மூக்கன்.. சித்தப்பு நீங்க எங்க இங்க! பதறிய மெக்கானிக்!
விருதுநகர்: ஏசியை பழுது பார்க்க முயன்றபோது? கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஏசிக்குள் இருந்து வெளியே சீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாம்பு குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டிருக்கின்றனர்.

என்ன நடந்தது?
வெயில் காலம் தொடங்கிவிட்டதால் ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. கூலிங் சரியாக இருக்க வேண்டும் எனில் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். எனவே தற்போது ஏசி மெக்கானிக்களுக்கு டிமாண்ட் எகிறியிருக்கிறது.
சிவகாசி காரநேசன் பகுதியை சேர்ந்த அசோக், தனது வீட்டு ஏசியை சர்வீஸ் செய்ய ஏசி மெக்கானிக்கை இன்று காலை வர வழைத்திருக்கிறார். மெக்கானிக்கும், வந்த வேலையை தொடங்கியிருக்கிறார். முதலில் ஏசியின் முன் பக்கத்தை சுத்தம் செய்வதற்காக கழற்றியிருக்கிறார். அங்குதான் 'தம்பி உனக்கு ஓர் அதிர்ச்சி' என.. பாம்பு ஒன்று எட்டி பார்த்திருக்கிறது.
மெக்கானிக்குக்கு ஷாக்
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மெக்கானிக்.. சித்தப்பு நீங்க எங்க இங்க? என்கிற கணக்காக ஷாக் ஆகியிருக்கிறார். அப்புறம் என்ன? அலறியடித்துக்கொண்டு ஓடிய மெக்கானிக்கை சமாதானப்படுத்திய வீட்டு ஓனர், பாம்பு பிடிக்க தீயணைப்புத்துறையினருக்கு போன் செய்திருக்கிறார். அவர்கள் வந்து பாம்பை பிடித்துக்கொண்டு போய், பக்கத்தில் இருக்கும் வனப்பகுதிக்குள் விட்டிருக்கின்றனர்.
என்ன பாம்பு அது?
ஏசிக்குள் இருந்தது கொம்பேறி மூக்கன் பாம்பு என்று வனத்துறையினர் கூறியிருக்கின்றனர். இந்த வகை பாம்புகள் மனிதர்களை கடித்துவிட்டால், அவர்களின் சடலம் சுடுகாட்டில் எரியூட்டுவதை தூரத்திலிருந்து மரத்தின் மீது ஏறி நின்று இந்த பாம்பு பார்க்கும் என்று சொல்வார்கள். இதெல்லாம் மூடநம்பிக்கை. அப்படியெல்லாம் இந்த பாம்பு செய்யாது.
டேஞ்சரான பாம்புகள்
கொம்பேறி மூக்கனுக்கு மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷம் கிடையாது. இது கடித்துவிட்டால் கடித்த இடத்தில் லேசான அரிப்பு, வீக்கம் ஏற்படும் அவ்வளவுதான். நம்மூரை பொறுத்தவரை, 4 பாம்புகள்தான் ரொம்பவும் டேஞ்சர்.
- நல்லபாம்பு (நாகம்)
- சுருட்டை விரியன்
- கட்டுவிரியன்
- கண்ணாடி விரியன்
எப்படி கண்டுபிடிப்பது
இதில் நல்லபாம்பு பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இந்த வகை பாம்புகளின் தலைக்கு பின்னால் U வடிவம் இருக்கும். இதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
சுருட்டை விரியனின் தலை முக்கோண வடிவில் இருக்கும். தலையின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் அம்பு அல்லது சிலுவை போன்ற ஒரு குறி இருக்கும். இது இதன் மிக முக்கியமான அடையாளம்.
கட்டுவிரியன், பெயருக்கு ஏற்றார் போல நல்ல கருப்பாக, வெள்ளை உருளை கோடுகளுடன் இருக்கும். இது பெரும்பாலும் இரவில்தான் வெளியே வரும்.
கண்ணாடி விரியன் ரொம்பவும் ஷார்ப்பான பாம்பு. பார்க்க குட்டி மலைப்பாம்பு போல தெரியும். நெருங்கி போனால், 1-2 அடி வரை தாவி கடிக்கும்.
சாதுவான பாம்பு
ஆனால், கொம்பேறி மூக்கன் மிகவும் பயந்த சுபாவம் கொண்டது. மனிதர்களை பார்த்தால் துண்டை காணோம், துணியை காணோம் என தெறித்து ஓடிவிடும். இதனால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. எலிகளை கட்டுப்படுத்தி நமக்கு நல்லதுதான் செய்து வருகிறது. எனவே இந்த பாம்பை பார்த்தால் அடித்து கொல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications