சார் இதுவரைக்கும் நாங்க ட்ரெய்ன்ல போனதே இல்ல! ஏங்கிய மாணவர்கள்.. சர்ப்ரைஸ் கொடுத்த தன்னார்வலர்கள்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் ரயிலில் பயணம் செய்யாத மாணாக்கர்களை, தன்னார்வலர்கள் தங்களது சொந்த செலவில் ரயிலில் அழைத்துச் சென்று மகிழ்ந்தனர்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி மையங்களில், தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மாணவ, மாணவிகளின் இயல்புகளை புரிந்துகொண்டு, அவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் அளித்து, துணை ஆசிரியர்கள் போல் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
எங்களுக்கு சாதி இல்லை மதம் இல்லை! சர்டிஃபிகேட் வாங்கிய விருதுநகர் தம்பதி! குழந்தைகளுக்கும் அதேதான்!
தன்னார்வலர்கள்
அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில், இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவ, மாணவிகளை, தன்னார்வலர்கள் தங்களது சொந்த செலவில் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இல்லம் தேடி கல்வி மையங்களில் உள்ள தன்னார்வலர்கள், மாணவர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பு, அக்கறை, கரிசனை உள்ளத்தோடு, முதல் பருவ தேர்வு விடுமுறையிலும், அவர்கள் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் சுற்றுலா
அதன் தொடர்ச்சியாக திருமலாபுரம் மையத்தின் தன்னார்வலர்கள், பாடம் தொடர்புடைய அருகேயுள்ள திருவண்ணாமலையில் உள்ள சிவன் குகைக் கோவிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர். கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி பகுதி தன்னார்வலர்கள், வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அழைத்துச் சென்று, அதன் நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்தனர்.
செங்கோட்டை ரயில்
தன்னார்வலர்கள் சிவகாமி, மகாலட்சுமி, நர்மதா, சசிகலா, சந்திரபதனி ஆகியோர் தங்களது மையங்களில் உள்ள மாணவர்களில், ரயிலை பார்க்காத மற்றும் ரயிலில் பயணிக்காத மாணவ, மாணவியரை தங்களது சொந்த செலவில் ரயிலில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், மாணவ, மாணவியர்கள் மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இன்று காலை 8.40 மணிக்கு செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் பாராட்டு
ரயிலில் சக பயணிகள், மாணவ மாணவியரை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு தேநீர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்தனர். மேலும் தன்னார்வலர்களின் சேவையை, ரயில் பயணிகள் வெகுவாக பாராட்டினர். செங்கோட்டையில் மாணவ மாணவியர் உணவு சாப்பிட்ட பின்னர் மீண்டும் அதே ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தனர். தன்னார்வலர்களின் இந்த அளப்பறிய கல்வி சேவையை, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.