அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அம்மா மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
விருதுநகர்: விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் அமராவதி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 94.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். ஒரு காலத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டவர் காலப்போக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்டு வருகிறார். சிறுவயதிலேயே பஞ்சு வியாபாரம் பார்க்கச் சென்ற இவர், எம்.ஜி.ஆர். ரசிகராகி அதிமுகவில் இணைந்து அமைச்சராகி பிறகு திமுகவில் இணைந்து இங்கும் அமைச்சராகி விருதுநகர் மாவட்ட அரசியலில் கோலோச்சி வருகிறார்.

வீட்டிற்கு மூத்தப்பிள்ளை என்பதால் எப்போதும் அம்மா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கக் கூடியவர். இவரது தாயார் அமராவதி அம்மாளை, கடைசி மூச்சு வரை இவர் தான் கவனித்துக்கொண்டார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் 94வது வயதில் இன்று அதிகாலை காலமானார் அமராவதி அம்மாள். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி. அமராவதி அம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.'' இவ்வாறு முதல்வர் விடுத்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர்கள் பலரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications