Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலின் நண்பர்.. "அந்த" விமர்சனத்தை தாண்டி விருதுநகரில் 3 முறை வெற்றி.. யார் இந்த மாணிக்கம் தாகூர்?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்த மாணிக்கம் தாகூர் யார் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் காங்கிரசிற்கான மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஐந்தாண்டு செயல்பாட்டிற்கான மதிப்பீடை வழங்கும் தேர்தலாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் வேறு மாதிரியாக இருந்தது, ஈழப்போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டு இருந்தது.

ஈழ உணர்வாளர்களால் இங்கு காங்கிரஸ் திமுக கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலகட்டம். ஈழப் ஆதரவாளர்களின் தமிழக முகமாகவும், அதன் மையமாகவும் இருந்த வைகோ விருதுநகரில் அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவரை எதிர்த்து களம் இறக்கப்பட்டவர் தான் மாணிக்கம் தாகூர். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது பெரும்பாலானோருக்கு ஏன், பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே இவர் யார் என்று உண்மையில் தெரியாது. வெளி மாவட்டத்துக்காரர், நன்றாக தமிழ் கூட பேச தெரியாது, மேலிட செல்வாக்கால் சீட்டைப் பெற்றவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

கூடவே ஈழப் போரின் காரணமாக காங்கிரஸும் கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி இருந்த நேரம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் வைகோ எளிதாக வெல்வார் என்று கூறி வந்தன. ஆனால் தேர்தலில் வைகோவை வீழ்த்தி 15,000 திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். யார் இந்த மாணிக்கம் தாகூர் என்று அனைவரும் புருவத்தை உயர்த்தினர்.

மாணிக்கம் தாகூர் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். இவரது தாத்தா 1960களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1990களின் பிற்பகுதியில் மாணவர் காங்கிரஸின் உறுப்பினராக பல்வேறு பொறுப்புகள் வகித்த மாணிக்கம் தாகூர் 2000 களில் இளைஞர் காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வைத்து அதன் பொதுச்செயலாளர் வரை உயர்ந்தார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ராகுல் காந்தியின் உற்ற நண்பராகவும் அறியப்பட்ட இவர் 2009இல் ராகுல் காந்தியால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேசிய தலைமை உடன் நன்கு நெருக்கமான இவர் தனது செயல்பாடுகள் மற்றும் கட்சி பணிகளால் மேலிடத்தின் நன்மதிப்பை பெற்றவர்.

சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா, கர்நாடகா, தெலுங்கானா என்று பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளராக மாநில பொறுப்பாளராக பணியாற்றி சிறப்பான வெற்றிகளை கட்சிக்கு பெற்று தந்தவர். குறிப்பாக 2020இல் அகில இந்திய காங்கிரஸின் தெலுங்கானா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து தெலுங்கானா காங்கிரசை புத்துணர்ச்சி பெற செய்தார். இவரது சீரிய செயல்பாடுகளாலே தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்பட்டார். ஏற்கனவே 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் வெற்றி பெற்றிருந்ததாலும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மற்றும் கட்சியினரிடம் நன்கு அறிமுகம் மற்றும் நன்மதிப்பை பெற்று இருந்ததாலும் எளிதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேசமயம் அதிமுக தேமுதிக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிக ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் களமிறங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அதேசமயம் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் அவர்கள் களம் இறக்கப்பட்டார்.

எனவே விருதுநகர் தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. எளிதாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் கடுமையாக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். விஜயகாந்தின் சொந்த ஊர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிகுள் வருவது மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறப்பு ஏற்படுத்திய அனுதாபம் போன்றவை விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக இருந்தது.

மத்தியில் தொடர்ந்து மோடி வெல்வார் என்ற கணிப்புகளும் மக்களிடம் நன்கு அறிமுகமான ஸ்டார் முகம் தொகுதியில் பரவலாக உள்ள சமுதாய பின்புலம் போன்ற காரணங்களால் ராதிகா சரத்குமார் சற்று போட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்பவே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். பிற்பகலுக்கு பின் மாணிக்கம் தாகூர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தார். இருப்பினும் வாக்கு வித்தியாசம் கூடுவதும் குறைவதுமாகவே இருந்தது. எனவே கடைசி வரை யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி கட்சியின் கடுமையான தேர்தல் வேலைகள் அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்துள்ளன. மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற செயல்பாடுகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் முகமாக சிறப்பாக செயல்படக் கூடியவர். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நன்கு தோழமையுடன் பழகக் கூடியவர்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் மற்றும் அவர்களது இல்ல துயர சம்பவங்களில் கலந்து கொள்வதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளவர். அனைவரிடமும் கட்சி அமைப்பு தாண்டி நெருக்கமாக நட்பை பேணக் கூடியவர். இந்த செயல்பாடுகளே அவருக்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளன. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக களம் கண்ட மாணிக்கம் தாகூர் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+