"கட்சிக்காரங்களோட அட்ஜஸ்ட் பண்ண சொல்லி மிரட்டுறாரு” - தி.மு.க நிர்வாகி மீது பெண் பகீர் புகார்!
விருதுநகர்: தி.மு.க நிர்வாகி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் ஒருவர் தனக்கு தி.மு.க நிர்வாகி அய்யனார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்துள்ளார்.
ஆளுங்கட்சி பிரமுகரான அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி காவல் நிலையம் முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிர்வாகி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் கவிதா. இவர் தனது குடும்ப வருமானத்திற்காக வீடு வீடாகச் சென்று அப்பளம் மற்றும் வெள்ளைப்பூண்டு விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்குத்தான் தி.மு.க நிர்வாகி அய்யனார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

முன்னாள் அதிமுக நிர்வாகி
தி.மு.க பிரமுகரான அய்யனார், இதற்கு முன்பு அ.தி.மு.கவில் இருந்துள்ளார். பேரூராட்சி துணை சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார். இந்த அய்யனார் கடந்த இரண்டு மாதங்களாக கவிதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
மேலும் கவிதாவிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக தான் சொல்லும் கட்சிக்காரர்களுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

வீடு புகுந்து தாக்குதல்
கவிதா அவரது பேச்சைக் கேட்காததால், தனது அடியாட்களுடன் கவிதாவின் வீட்டிற்கே சென்று தான் சொல்வதைக் கேட்கவேண்டும் என மிரட்டல் விடுத்து, கவிதா மற்றும் அவரது தாயாரை தாக்கியுள்ளார். இதையடுத்து கவிதா மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அய்யனார் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம்
இதையடுத்து, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதோடு, வீடு புகுந்து தாக்குதல் நடத்திய தி.மு.க நிர்வாகி மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தி.மு.க பிரமுகர் அய்யனார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி காவல்நிலையம் முன்பு அவரது உறவினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சி.எம் செல்லிலும் புகார்
தனக்கு பாலியல் கொடுத்து வரும் தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளதாக கவிதா தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனியாக வாழ்ந்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் தி.மு.க நிர்வாகி மீது முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications