அதென்ன பூனை குட்டியா? 250 கிலோவில்.. வீட்டின் பேஸ்மென்ட்டில் வளர்ந்த மிருகம்! ஆடிப்போன ஹவுஸ் ஓனர்
வாஷிங்டன்: வீடுகளில் பூனை, நாய் வளர்ப்பது இயல்புதான். இன்னும் சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். ரொம்பவும் அரிதாக பாம்புகளை கூட செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், கலிபோர்னியாவில் ஒருவர் வீட்டிற்கு அடியில் 250 கிலோ எடை கொண்ட கரடியை வளர்த்திருக்கிறார்.
உண்மையில் இவர் கரடியை வளர்க்கவில்லை. கரடிதான் இவருக்கு தெரியாமல், இவர் வீட்டுக்கு அடியில் குளிருக்கு இதமாக வளர்ந்திருக்கிறது. விஷயம் தெரிந்த ஹவுஸ் ஓனர், அதை வெளியேற்ற முயன்றிருக்கிறார். ஆனால், வெளியேறாமல் அடம்பிடித்து வருகிறது.

கலிபோர்னியாவின் அல்டீனா பகுதியை சேர்ந்தவர் கென் ஜான்சன். இவரது வீட்டிற்கு கீழ்தான் கரடி வாழ்ந்து வந்திருக்கிறது. அதாவது, கலிபோர்னியாவில் மர வீடுகள் அதிகம். மரங்களை கொண்டு வீடுகள் கட்டும்போது வீட்டில் ஈரப்பதம் பரவாமல் இருக்க, வீட்டிற்கும் தரைக்கும் 3 அடி உயரம் கேப் விட்டு கட்டுவார்கள்.
இந்த இடத்தில்தான் கடந்த நவம்பர் மாதம் கரடி பதுங்கியிருக்கிறது. பொதுவாக கரடிகள் குளிர் காலத்தில் நன்றாக தூங்கும். இதற்கு இருட்டான குகைகளை தேடும். அப்படி தேடிதான் கரடி இங்கு வந்திருக்கிறது. சரியாக நவம்பர் மாதத்திலிருந்து வீட்டிற்கு அடியில் மர்மமாக சத்தம் கேட்டிருக்கிறது. பயந்து போன ஹவுஸ் ஓனர் பேய் ஓட்டுபவர்களை கூப்பிட்டு வந்து பேய் ஓட்டியிருக்கிறார். ஆனால், சத்தம் குறையவே இல்லை. எனவே சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்திருக்கிறார்.
அதில்தான், 250 கிலோ எடை கொண்ட ஆண் கரடி ஒன்று நைஸாக வீட்டிற்கு அடியில் பதுங்கியிருக்கிறது. அதை விட செய்யாத வேலைகளே கிடையாது. வெடி போட்டு பார்த்தாச்சு, கூண்டு வைத்து பார்த்தாச்சு. எதுக்கும் கரடி சிக்கவில்லை. கடைசியாக டிச.9ம் தேதி வனத்துறை வைத்த கூண்டில் கரடி சிக்கியிருக்கிறது. தொல்லை ஒழிந்தது என்று ஹவுஸ் ஓனர் நினைத்துக்கொண்டிருக்க, சிக்கியதோ வேறு ஒரு கரடி.
எனவே வனத்துறையினரும், இதெல்லாம் வேலைக்கு ஆகாது, சில மாதங்கள் வரை தூங்கிவிட்டு சம்மர் வந்தவுடன் கரடி இடத்தை காலி செய்துவிடும் என்று கூறி, நைஸாக நழுவிக்கொண்டனர்.
இப்போது ஹவுஸ் ஓனர் கரடிக்கூடாத்தான் தூங்குகிறார். மேலே அவர் தூங்க, வீட்டிற்கு அடியில் கரடி தூங்கிக்கொண்டிருக்கிறது. கரடியை கண்காணித்துக்கொண்டே இருங்க. அது வெளியில் செல்லும்போது, வீட்டின் அடிபாகத்தை அடைத்துவிடுங்கள்.
கரடியை பயமுறுத்தும் வகையில் பயங்கரமான சத்தத்தை எழுப்பி அதை விரட்டுங்கள் என்று வனத்துறையினர் அட்வைஸ் செய்திருக்கின்றனர். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதென்ன புது வீட்டிற்கு வந்த சோதனை என, ஓனர் இன்னமும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications