"ஆட்டோமேட்டிக் துப்பாக்கி!" தூதரகங்கள் இருக்கும் பகுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு! வாஷிங்டனில் பரபர
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகப் பெரியளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவதில்லை. இதற்கிடையே அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாஷிங்டனின் கனெக்டிகட் அவென்யூ பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. பல பள்ளிகள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ளன நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு சில மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

12 வயது சிறுமி
இதில் காயமடைந்தவர்களில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரு ஆண்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 12 வயது சிறுமி ஒருவரும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மர்ம நபர்
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்யும் முன்பு, அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரின் வீட்டைச் சோதனை செய்ததாகவும் அப்போது அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கி செட்அப்பை கண்டறிந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

வைரல் வீடியோ
மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பார்வையில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதும் அப்போது அப்பாவி மக்கள் தலை தெறித்து ஓடுவதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை கொண்டு போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications