அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே.. தலைகுப்புற கவிழ்ந்த விமானம்.. தீ பிடித்து விபத்து.. 7 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வரும் நிலையில், சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து டேக் ஆப் ஆகும் போது தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 பேர் பலியாகியுள்ளனர். விமான சிப்பந்தி ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் பனிப்புயலால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை டிசம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை குளிர் கடுமையாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

அமெரிக்காவில் பனிப்புயல்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் வெப்பநிலை மைனஸ் டிகிரியில் உள்ளது. இதற்கிடையே, அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவாகியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்த புயலுக்கு பெர்ன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டக்கி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம்
இதற்கான உத்தரவை டிரம்ப் வெளியிட்டுள்ளார். பனிப்புயல் காரணமாக விமான சேவைகளும் ரத்து ஆகியுள்ளன. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெர்ன் பனிப்புயல் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் அங்கு உயிரிழந்தனர். பெர்ன் பனிப்புயலால் அமெரிக்காவில் பல இடங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.
பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே பனிப்புயலுக்கு நடுவே.. பாங்கோர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
Bombardier Challenger 600 ரக தனியார் ஜெட் விமானமே விபத்துக்குள்ளானது. விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்.
விமானப் பணியாளர் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.
நேற்று இரவு சுமார் 7:45 மணியளவில் விமானம் புறப்பட முற்பட்ட போது, ஓடுதளத்திலேயே தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்தது. போஸ்டன் நகரில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள இந்த விமான நிலையம், விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது.












Click it and Unblock the Notifications