சிகிச்சையே இல்லாமல். எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வியை வென்ற முதல் நோயாளி.. அதிசயம்
வாஷிங்டன்: 1992 ஆம் ஆண்டில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளாமல் நோயில் இருந்து முற்றிலும் குணம் அடைந்திருப்பது, விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் ஆபத்தான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து குணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் இவர் அவ்வாறு எந்த சிகிச்சையும் செய்யவிலலை. அத்துடன் மருந்துகள் இல்லாமல் வைரஸில் இருந்து குணமான முதல் நபராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிசயிக்கிறார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் லோரீன் வில்லென்பெர்க் (Loreen Willenberg) வயது 68. இவர் 1992 - ம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டார். நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துவிட்டது.

முழுமையாக மீண்டார்
இந்நிலையில் லோரீன் வில்லென்பெர்க்கின் உடல் ஹெச்.ஐ.வி கிருமியை வெல்லும் அளவுக்கு அவரது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மண்டலம் மாறியது. இதற்காகவே இவர் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பிரபலமானவராக உருவெடுத்தார். இந்நிலையில் வைரஸ் கிருமியை வென்று இப்போது முழுமையாக குணம் அடைந்து சாதித்துள்ளார் லோரீன் வில்லென்பெர்க்.

எந்த மருந்தும் இல்லை
முன்னதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த டிமோதி ப்ரௌன் (Timothy Brown), லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்லெஜோ (Adam Castillejo) ஆகிய இருவர் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார்கள். ஆனால் இருவருமே புற்றுநோய்க்காக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆவர் எலும்பு மஞ்சை மாற்றப்பட்ட பிறகு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் விரைந்து செயல்பட்டு வைரஸை அழித்தது. ஆனால், லோரீன் வில்லென்பெர்க் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. ஹெச்.ஐ.வி க்கு எதிராக எந்தவொரு ஆண்டிவைரல் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் குணம் அடைந்துள்ளார். இதனால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம், அதிசயம் என்று பேசி வருகின்றனர்.

வைரஸை அடக்க முடியும்
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி கட்டுரையின் படி, உடல் ஹெச்.ஐ.வியை அடக்கக்கூடும், இது மரபியல் முன்னேற்றத்தால் மட்டுமே இப்போது தெரியும். பல ஆண்டுகளாக ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையை மேற்கொண்ட சில சிறிய எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுடையவர்களும் இதேபோல் வைரஸை அடக்கவும், மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தவும் முடியும், புதிய நம்பிக்கையை இந்த ஆய்வு வழங்குகிறது.

அருமையான கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இயங்கும் பீட்டர் டோஹெர்டி தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் (Peter Doherty Institute for Infection and Immunity) இயக்குனரான மருத்துவர் ஷரோன் லெவின், "சிகிச்சை பெறாமலே ஹெ.ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பது மிகவும் புதுமையாக உள்ளது.. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு ஹெச்.ஐ.வி.யுடன் வாழும் 37 மில்லியன் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கண்டுபிடிப்பதே, ஆராய்ச்சியாளர்களின் முன்பு உள்ள உண்மையான சவால்" என்று கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சை
ஆராய்ச்சியின் படி, ஹெச்.ஐ.வி நோயாளிகளில் 1% பேர் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் இல்லாமல் வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பல ஆண்டுகளாக ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் சிலருக்கே இதே முடிவு வரக்கூடும், குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டால், இந்த நிலைமை வர வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications