அதானிக்கு பெரிய நிம்மதி! ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை நிராகரித்தது செபி.. வெளியிட்ட பரபர அறிக்கை
வாஷிங்டன்: இந்தியாவின் பெரும் தொழில் குழுமமான அதானி நிறுவனத்திற்கு பங்கு விலையை செயற்கையாக அதிகரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்து, அதானிக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஹிண்டன்பர்க். ஷார்ட் செல்லிங் நிறுவனமான இது கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப் பெரியளவில் சரிந்தன. அதானி குழுமம் மட்டுமன்றி அமெரிக்காவின் நிக்கோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறித்தும் இந்த அமைப்பு அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவின் பெரும் தொழில் குழுமமாக உள்ள அதானி நிறுவனம், கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்திற்கு பெரும் தலைவலியாக மாறின. அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. எனினும், தங்கள் நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.
இந்த நிலையில், இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபி, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியில் ஆளும் பாஜகவை, இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில்தான், அதானி மீதான குற்றச்சாட்டை செபி நிராகரித்துள்ளது. இரண்டு உத்தரவுகளில் தனது முடிவுகளை வெளியிட்ட செபி, எந்த விதிமீறல்களும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஏனெனில், இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில்லாத தரப்பினருடன் ஆன ஒப்பந்தங்கள் என்று வகைப்படுத்தப்படாத காலத்தில் நடந்தவை என செபி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வரையறை 2021 திருத்தத்திற்குப் பிறகு மாற்றப்பட்டது. அனைத்து கடன்களும் திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும், நிதி நோக்கம் கருதிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், எந்த மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறையும் இல்லை என்றும் செபி குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications