"ஹெச் 1பி விசா.." ரூல்ஸை மாற்றிய அமெரிக்கா.. இந்த ஆண்டே அமலுக்கு வருமாம்! இந்தியர்களுக்கு நல்லதுதான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச் 1பி விசா குறித்த விவாதம் இப்போது தீவிரமடைந்துள்ளது. ஹெச் 1பி விசா வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குப் பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை.. சொல்லப்போனால் இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குப் பயனுள்ளதாகவே இருக்கப் போகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்த டிரம்ப், சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹெச் 1பி விசா:
இந்தச் சூழலில் அங்கு ஹெச் 1பி விசா குறித்து மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. டிரம்ப் கட்சியைச் சேர்ந்த பல தீவிர வலதுசாரிகள் ஹெச் 1பி விசா திட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இது அமெரிக்கர்களுக்குக் கிடைக்கும் வேலையைப் பறிக்கிறது என்பதே அவர்கள் குற்றச்சாட்டு. அதேநேரம் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் இதற்கு ஆதரவாக உள்ளனர். இப்படி மாறி மாறி விவாதம் நடக்க திடீரென ஹெச் 1பி விசா குறித்து ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நல்ல செய்தி:
இதனால் எங்கு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குப் பாதிப்பு வருமோ என அச்சப்பட வேண்டும். ரொம்பவே நல்ல செய்தியைத் தான் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை ஹெச் 1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் புதுப்பிக்க இந்தியா திரும்ப வேண்டியது கட்டாயமாக இருந்தது. அதாவது அவர்கள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தான் ஹெச் 1பி விசாவை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், இப்போது இந்தியாவில் விசாவுக்கான காத்திருப்பு நேரம் மாதக்கணக்கில் இருக்கிறது. எப்போது அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரியாத சூழலே நிலவுகிறது. அப்படியிருக்கும் போது அமெரிக்காவில் ஹெச் 1பி விசா பெற்று வேலையில் இருப்போர், அதைப் புதுப்பிக்க இந்தியா வந்து செல்வது சிரமமாக இருந்தது. இதனால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ஹெச் 1பி உள்ள இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்:
அந்த கோரிக்கையை ஏற்று இப்போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், ஹெச் 1பி விசா வைத்திருப்போர் அமெரிக்காவை விட்டு வெளியேறாமலேயே தங்கள் விசாவை புதுப்பிக்க முடியும். முதற்கட்ட சோதனையில் இத்திட்டம் வெற்றிகரமாக இருந்ததால், இந்தாண்டு இறுதிக்குள் இது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
டெல்லி தூதரக அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இந்தியாவில் இருந்து பல துறைகளில் வேலை செய்வோர் இதன் மூலம் அமெரிக்காவில் இருந்தபடியே தங்கள் விசாவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். சோதனை முயற்சியில் பல ஆயிரம் பேர் வெற்றிகரமாக அங்கேயே புதுப்பித்தனர். இதன் காரணமாகவே அமெரிக்காவில் இருந்தபடியே புதுப்பிக்கும் திட்டத்தை இந்தாண்டு செயல்படுத்த இருக்கிறோம். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
இந்தியர்களுக்கு உதவும்:
இது அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா பெற்றிருக்கும் இந்தியர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஹெச் 1-பி விசாவை அதிகம் இந்தியர்களே பெறுகிறார்கள். அதிலும் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டில் ஹெச் 1பி விசாக்களை சுமார் 72%க்கு மேல் இந்தியர்களே பெற்ற நிலையில், இந்தத் திட்டம் இந்தியர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications