21 நாட்களுக்குள் பதில் அளிக்கனும்.. அதானிக்கு வலுக்கும் சிக்கல்! அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதானியின் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இந்த சம்மனில், 'இந்த சம்மன் கிடைத்த 21 நாட்களுக்குள் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை பெற்ற விவகாரத்தில் தொழில் அதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடறிந்த தொழில் அதிபரும் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள்ளும் இருப்பவர் கவுதம் அதானி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி, இந்தியா மட்டும் இன்றி உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருகிறார். நிலக்கரி சுரங்கம், துறைமுகம், மின்சார உற்பத்தி என பல் தொழில்களில் அதானி குழுமம் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகித்து வரும் அதானிக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதாவது, சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடுகளை பெற்றதாகவும் இது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது என்பதால், அமெரிக்காவின் பங்கு பரிவர்த்தனை ஆணையம் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த புகாரில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்புள்ள சூரிய ஒளி மின்சார திட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அதானி நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிகாரிகளுக்கு 265 கோடி டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதானியின் பண்ணை வீட்டுக்கு இந்த சம்மன் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல சாகரின் போடாக்தேவ் வீட்டிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில், 'உங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளுக்கு, சம்மன் கிடைத்த 21 நாட்களுக்குள் நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.
பதில் அளிக்க தவறினால் தானாகவே உங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும். எனவே, நீங்கள் கட்டாயம் நீதிமன்றத்தில், பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதானியை மோடி பாதுகாக்கிறார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அவருக்கு மேலும் நெருக்கடியாக இந்த சம்மன் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications