பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் ரிலீஸ்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு! பரபர தகவல்
வாஷிங்டன்: பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அரசு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பின்னர், ஏற்பட்ட கலவரத்தில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரங்களில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது.
இந்த கலவரத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் பல மோசமான கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறின.

பில்கிஸ் பானு
அப்படித் தான் அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூர் பகுதியில் இருந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை ஒரு கும்பல் அடித்தே கொன்றது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் மிகக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. இதுமட்டுமின்றி, பில்கிஸ் பானுவின் சிறு குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

விடுதலை
கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை விசாரித்த சிபிஐ, 2004இல் குற்றவாளிகளைக் கைது செய்தது. இதை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகளில் ஒருவர் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் குஜராத் அரசு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், அவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்கா
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் அரசு அமைப்பான சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்த குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது நியாயமற்றது என்று தெரிவித்து உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாகக் கண்டித்து உள்ளது.

நியாயமற்றது
இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஆபிரகாம் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2002 குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து, இஸ்லாமியர்களைக் கொன்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே நியாயமற்ற முறையில் விடுவித்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது.

நீதியின் கேலிக்கூத்து
இது நீதியின் கேலிக்கூத்து என்று குறிப்பிட்டுள்ள அமைப்பின் கமிஷனர் ஸ்டீபன் ஷ்னெக், "2002 குஜராத் கலவரத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதியின் கேலிக்கூத்து. மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் தண்டனையிலிருந்து தப்பும் போக்கு அதிகரித்து இருப்பது வேதனை அளிக்கிறது" என்று கூறி உள்ளனர்.

பழைய விதிகள்
கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. இதனால் இது சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து குஜராத் போலீஸ் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "கருணை அடிப்படையில் விடுவிக்கும் புதிய விதிகள் 2008இல் கொண்டு வரப்பட்டது. ஆனால், இவர்கள் குற்றவாளிகள் என அதற்கு முன்னரே தீர்ப்பு வந்துவிட்டது. இதன் காரணமாகப் பழைய 1992 விதிகளின் அடிப்படையிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications