'ஐந்து கண் உளவுத்துறை'.. கனடா பகிரங்கமாக இந்தியாவின் பெயரை சொன்னது ஏன்.. அமெரிக்கா தூதர் தகவல்
வாஷிங்டன்: காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், ஐந்து கண் கூட்டாளிகள் கொடுத்த உளவுத்துறை உறுதி செய்துவிட்டே, இதற்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக, கனடா நாடாளுமன்றத்தி்ல் பிரதமர் ட்ரூடோ பேசினார் என அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தி்ல் அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ பேசும் போது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஜூன் மாதம் 18 தேதி குருத்வாராவுக்கு அருகே கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்தில், இந்திய அரசுக்கு ஒரு "நம்பகமான" தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது" என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது, "வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவை சீண்டி பார்த்து பிரச்னைகள் ஏற்படுத்துவது கனடாவின் நோக்கமல்ல" என்றும் கூறினார்.
எனினும் "ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய அரசுக்கு தொடர்பிருக்க சாத்தியமுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக கூறினார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பத்தகுந்த காரணங்கள் இருக்கின்றன.
ஆகவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் " என்றார். இந்த கருத்தை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை அந்நாட்டு அரசு உடனடியாக வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்திய அரசும், கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கனடா மண்ணில் காலிஸ்தானி தீவிரவாதி ஒருவரைக் கொன்றதில் இந்திய அரசின் முகவர்கள் இருப்பதாக 3கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எப்படி அவ்வளவு உறுதியாக பேசினார் என்பது உலகின் பல நாடுகளுக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.இதற்கான பதிலை அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் டேவிட் கோஹன் கூறியதாக கனடாவின் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து கண் கூட்டாளிகள் கொடுத்த உளவுத்துறை உறுதி செய்துவிட்டே, இதற்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக, கனடா நாடாளுமன்றத்தி்ல் பிரதமர் ட்ரூடோ பேசினார் என அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் தெரிவித்தார். ஐந்து கண் கூட்டாளிகள் யார் யார் என்று பார்த்தால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டணியாகும்.
இந்த நாடுகள் இணைந்து உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன. அப்படி பகிர்ந்த தகவலை தான் பிரதமர் ட்ரூடோ பேசினார் என அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் தெரிவித்தார். கனடாவின் 24 மணிநேர அனைத்து செய்தி நெட்வொர்க்கான CTV நியூஸ் சேனல் தான் இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications