ரஷ்யா பாணியில் சீனா படையெடுக்கும்? ஜனநாயக நாடுகளுக்கு இப்போதே அழைப்பு விடுக்கும் தைவான்!
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது போல் தைவான் மீது சீனா யுத்தம் நடத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்போதே ஜனநாயக நாடுகள் தங்களுக்கு ஆதரவு குரல் எழுப்ப வேண்டும் என்கின்றனர் தைவான் தலைவர்கள்
Recommended Video
உக்ரைனின் அமெரிக்கா சார்பு நிலைக்கு எதிராக ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பல நகரங்களை அடுத்தடுத்து ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் மேலும் பல நாடுகள் அணிவகுக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இது 3-வது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கிற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தது தைவான்?
இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே அனேகமாக தைவான் நாட்டை சீனா ஆக்கிரமிக்கும் யுத்தத்தை நடத்தக் கூடிய சாத்தியங்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தைவான் வான்பரப்பில் கடந்த வாரம் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி பறந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால் டிரம்ப்பும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தைவான்-சீனா என்ன சிக்கல்
சீனா- தைவான் விவகாரம் என்பது 2-ம் உலகப் போரின் இறுதியில் தொடங்கியது. 2-வது உலகப் போருக்கு பின்னர் சீனாவில் ஆட்சியில் இருந்த கோமிண்டாங் அரசுக்கும் மாவோவின் கம்யூனிஸ்ட் படைக்கும் இடையே போர் நிகழ்ந்தது. இப்போரின் இறுதியில் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் மாவோவின் செம்படை வசமானது. இதனைத் தொடர்ந்து 1949-ல் பெய்ஜிங்கை தலைநகராக கொண்டு சீனா மக்கள் குடியரசு உதயமானது. அப்போது மாவோவின் செம்படையிடம் இருந்து கோமிண்டாங் அரசு 15 லட்சம் பேருடன் தைவான் பிராந்தியத்துக்கு தப்பிச் சென்றது. அத்துடன் சீனா தைவான் என்ற பெயரில் தனிநாட்டையும் பிரகடனம் செய்தனர். 1970-ம் ஆண்டு வரை ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அமைப்புகள் சீனா தைவான் தான் ஒரிஜனல் சீனா அரசு என அங்கீகரித்தன. பின்னர் 1971-ம் ஆண்டு முதல் பெய்ஜிங்கை தலைநகராக கொண்ட சீனா மக்கள் குடியரசை ஐ.நா.சபை ஒரிஜனல் சீனா அரசாக அங்கீகரித்தது.

சீனாவின் ஆட்டம்
இதன்பின்னர் சீனாவின் சட்டாம்பிள்ளைத்தனம் அதிகரித்தது. கம்போடியா, திபெத், தைவான் என அண்டை தேசங்கள் எல்லாவற்றும் சீனா உரிமை கோரியது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தையும் கூட சீனா உரிமை கோரி வருகிறது. தைவானை தம்முடைய நாட்டின் ஒரு அங்கம் என்கிற சீனாவின் குரலை அந்த நாடு முற்று முழுதாக நிராகரித்து வருகிறது. 1980களில் இருந்து ஹாங்காங் எப்படி சுயாட்சி பிரதேசமாக இருக்கிறதோ அதேபோல் தைவான் சுயாட்சி பிரதேசமாக இருக்கலாம் என்கிறது சீனா. ஆனால் தைவானோ நாங்களே சுயாட்சி இறைமை உள்ள தேசம் என்கிறது.

ரஷ்யா பாணியில்
2000-ம் ஆண்டு முதல் தைவானில் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு அதிபர் ஆட்சி முறை அமலில் உள்ளது. தற்போது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக முக்கியமான ஒரு நாடாக தைவான் உருவெடுத்திருக்கிறது. தைவானின் பொருளாதார விஸ்வரூபம் இப்போதும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் அமெரிக்கா சார்பு நிலைக்கு தைவான் தள்ளப்பட்டது. இதனை கடுமையாக எதிர்க்கும் சீனா தைவானை அச்சுறுத்தும் வகையில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி மிரட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது உக்ரைன் என்ற தனிநாட்டை ரஷ்யா ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் படையெடுத்திருக்கிறது. இதனால் தாம் உரிமை கோருகிற தைவான் மீது சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது. இதனால் எந்த ஒரு ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக நாடுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது; அனைத்து நாடுகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிற அலறலுடன் அழைப்பு விடுத்து வருகிறது தைவான்.












Click it and Unblock the Notifications