இந்தியாவுக்காக களமிறங்கிய சீனா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. விஸ்வரூபம் எடுக்கும் வரி பிரச்சனை
வாஷிங்டன் டிசி: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியாவுக்கு செக் வைக்கும் விதமாக, நம் நாட்டு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி நிர்ணயித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதற்கு சீனா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதுமே கடந்த சில வருடங்களாக போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போரும் உலகளவில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்தனர். இது ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து பொருளாதாரத்தை சீரமைக்க கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தொடங்கியது. மற்ற நாடுகளை ஈர்ப்பதற்காக தள்ளுபடி விலையில் எண்ணெய் கொடுத்தனர்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கின. ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே அமெரிக்க அதிபரானதில் இருந்து டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் அந்த நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இந்தியா மீதான வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நேரடியாக விமர்சித்த டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்த 25 சதவீதத்துடன் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்தார். இது ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால் இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான சீன தூதர் ஷு ஃபெய்ஹாங் கூறியதாவது: இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டி வருகிறது.
இந்த 50 சதவீத வரி விதிப்பை சீனா முற்றிலுமாக எதிர்க்கிறது. வரி விதிப்பும், வர்த்தகப் போரும் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைப்புக்கு இடையூறாக உள்ளது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது. இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்று கூறினார். எல்லை பிரச்சனைகளுக்கு நடுவே சீனா இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications