நாசா பரபரப்பு எச்சரிக்கை.. நிலாவை சீனா தனது பிரதேசமாக அறிவிக்க சான்ஸ்! வார்னிங் பெல் அடித்த பில்!
வாஷிங்டன்: சீனாவின் நிலவு ஆய்வுப் பணிகள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறி உள்ளக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Recommended Video
விண்வெளி குறித்த ஆய்வுப் பணிகளை உலகெங்கும் உள்ள நாடுகள் மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது. அதிலும் நமது துணைக் கோளான சந்திரன் குறித்த ஆய்வில் தன் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேதான் தான் இதில் கடும் போட்டி நிலவியது. இப்போது சீனாவும் இந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுவிட்டது.

சீனா
நிலவு குறித்த ஆய்வுப் பணிகளைச் சீனா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் நாசா தலைவர் பில் நெல்சன் ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்குச் சீனாவின் சந்திரன் ஆய்வு குறித்துக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. சீனா ஒரு நாள் நிலவில் தரையிறங்கும் என்றும் அந்த நாளில் நிலவைக் கூட சீனா அதன் பிரதேசமாக அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக பில் நெல்சன் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

சந்திரன் ஆய்வு
சந்திரனை ஆராய்வதில் கவனம் செலுத்தி வரும் சீனா, கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வை வேகமாக மேற்கொண்டு வருகிறது. 2013ஆம் ஆண்டில் சீனா முதல்முறையாகத் தனது ஆளில்லா ராக்கெட்டை சந்திரனில் தரையிறங்கியது. சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அளவுக்குச் சக்திவாய்ந்த ராக்கெட்டுகளை உருவாக்கும் பணிகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா நிச்சயம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா குற்றச்சாட்டு
இதனிடையே பில் நெல்சன் கூறுகையில், "சீனா நிலவுக்குச் செல்வதைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். அவர்கள் நிலவுக்குச் சென்ற உடன் "அது எங்கள் பிரதேசம். யாரும் வரக் கூடாது என்று சொல்லவும் கூட வாய்ப்பு இருக்கிறது. 2035ஆம் ஆண்டுக்குள் சீனா தனது சொந்த நிலவு நிலையத்தைக் கட்டி முடிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் பல சந்திர பயணங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

திருடும் சீனா
சீனா நிலவில் தரையிறங்குவதில் நாசா மிகவும் கவலை கொண்டு உள்ளதாகவும் அவர்கள் நிலவையே கூட கடத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக பில் நெல்சன் கவலை தெரிவித்துள்ளார். சீனாவின் விண்வெளி ஆய்வுப் பணிகளை ராணுவ திட்டம் எனக் குறிப்பிட்ட அவர், மற்ற நாடுகளின் திட்டங்களைத் திருடி, சீனா தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சாடி உள்ளார்.

சீனா கண்டனம்
நாசா தலைவரின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆகி உள்ள நிலையில், இதற்குச் சீனா கடும் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "நாசா தலைவர் உண்மைகளைப் புறக்கணித்து சீனாவைப் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசுவது இது முதல் முறை இல்லை. சீனாவின் ஆய்வுப் பணிகள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது. இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

ஆய்வுப் பணிகள்
சீனா கடந்த 2020 நவம்பர் மாதம் Chang'e 5 என்ற சாட்டிலைட்டை நிலவுக்கு அனுப்பியது. 2020 டிசம்பரில் நிலவுக்குச் சென்ற அந்த சாட்டிலைட், இரண்டு நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுப் பணிகளைச் செய்தது. மேலும், அங்கு இருந்து நிலவின் மண்ணையும் பூமிக்கு எடுத்து வந்தது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து நிலவுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையிலான திட்டத்தை வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications