பெரியவர்களை விட குழந்தைகளிடம் 10 முதல் 100 மடங்கு வைரஸ் லோடு.. கொரோனா ஆய்வில் புதிய திருப்பம்
வாஷிங்டன்: 5 வயதிற்கு குறைவான குழந்தைகள் தங்கள் மேல் சுவாசக் குழாயில் பெரிய அளவிலான கொரோனா வைரஸ் லோடை எடுத்துச் செல்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் குழந்தைகளின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் இதுவரை அதிகம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஆன் & ராபர்ட் எச். லூரி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு இது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது.

ஆய்வு கட்டுரை
குழந்தைகளில் கொரோனா பரவும் நிலவரத்தை புரிந்துகொள்வது பொது சுகாதார வழிகாட்டுதல்களை வகுக்க முக்கிய பங்காக இருக்கும் என்பதால், இந்த ஆய்வை நடத்தியதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், JAMA பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 27, 2020 க்கு இடையில், ஆய்வுக் குழு, சிகாகோவில் உள்ள உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவில் சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் அடிப்படையில், ஆய்வு கட்டுரையை தயாரித்துள்ளது.

பல பிரிவுகள்
1 மாதம் முதல் 65 வயது வரையிலான 145 நபர்கள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதித்தவர்கள், என தரம்பிரித்து ஆய்வு செய்யப்பட்டனர். ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 முதல் 17 வயது குழந்தைகள், மற்றும் 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்களின் சளி மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

100 மடங்கு கூட இருக்கிறதாம்
சிறு குழந்தைகளுக்கு அவர்களின் மேல் சுவாசக் குழாய்களில் பெரியவர்களை விட 10 மடங்கு முதல் 100 மடங்கு அதிகமாக வைரஸ் சுமை இருந்ததை அப்போது கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு வைரஸ் நியூக்ளிக் அமிலத்தில் மட்டுமே கவனம் வைத்திருந்தது.

குழந்தைகள்
இந்த வைரஸ் தொற்றை குழந்தைகள் பரப்ப முடியுமா என்பது பற்றி ஆய்வு நடக்கவில்லை. குழந்தைகள் எளிதில் மற்றவர்களிடம் பழகக் கூடியவர்கள். அதேபோல, தளர்வுகள் காரணமாக, பள்ளிகளில் அவர்கள் அருகருகே அமரக்கூடிய நிலை உள்ளது. மேலும், வைரஸ் லோடு அளவை சரியாக கணிப்பதுதான், தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, அதன் பலனை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications