அதிக காலம் கொரோனா பாதிப்பு... உருமாறிய கொரோனா தோன்றும்... புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
வாஷிங்டன்: கொரோனா காரணமாக அதிக காலம் பாதிக்கப்படும் நோயாளிகளின் உடலில் உருமாறிய கொரோனா வகைகள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது.
உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகள் செலுத்தப்படுவது மட்டுமே வைரஸ் பரவலிலிருந்து தப்ப ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிய ஆய்வு
தடுப்பூசி வழங்கும் பணிகள் ஒரு புறம் நடைபெறும் அதேவேலையில், கொரோனா வைரஸ் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆய்வுகளும் மறுபுறம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உருமாறிய கொரோனா
அமெரிக்காவில் 45 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே ஆன்டிபாஸ்போலிட் எனப்படும் அரிய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அதாவது, அவரது உடலின் நோயெதிர்ப்பு சக்தியே அவரது உடல் உறுப்புகளைப் பாதித்தது.

அதிக காலம் கொரோனா பாதிப்பு
இதனால் மருத்துவமனையில் சுமார் 154 நாள்கள் அனுமதிக்கப்பட்டிருந்தும்கூட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது அவரது உடலில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா பாதிப்பு இருந்த காலத்தில் அவரது உடலில் கொரோனா பல வகைகளிலும் உருமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு அதிக காலம் இருக்கும்பட்சத்தில் அவரது உடலில் உருமாறிய கொரோனா தோன்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் வகை கொரோனா
இதுபோல பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சில சமயங்களில் ஒர்ஜினல் கொரோனாலைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தற்போதுள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் வைரசஸ்களை சுற்றியுள்ள புரதத்தையே அழிக்கும். இந்த புரதங்கள் உருமாறிய கொரோனாவில் மாறியிருப்பதால், தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications