ரத்தம் கக்கிய வீரர்கள்.. வெனிசுலா அதிபரை அமெரிக்கா பிடித்தது எப்படி? சோனிக் ஆயுதத்தின் ஷாக் பின்னணி
வாஷிங்டன்: வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்காவின் சிறப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வேளையில் அமெரிக்கா சோனிக் ஆயுதங்களை பயன்படுத்தி வெனிசுலா படை வீரர்களை ரத்த வாந்தி எடுக்க வைத்தும், மூக்கில் இருந்து ரத்தம் வழிய செய்தும் நிலைகுலைய செய்தததாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோனிக் ஆயுதம் என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் கடும் மோதல் இருந்தது. இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது படையை வெனிசுலாவுக்கு அனுப்பி அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்தார்.

ஒருநாட்டுக்குள் நுழைந்து, அந்த நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி அதிபரையே கைது செய்வது என்பது அசாத்திய காரியம். அதனை தான் அமெரிக்க வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளது.
அன்றைய தினம் வெனிசுலா தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்காவின் போர்விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. மொத்தம் 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதன்பிறகு வெனிசுலாவின் தலைநகர் அருகே ஃபோர்ட் டியூனா (Fort Tiuna)ராணுவ தளத்தின் வளாகத்தில் நிகோலஸ் மதுராவின் சொகுசு பங்களாவில் நிகோலஸ் மதுரோ தனது மனைவி சிலியா ஃப்ளோரஸ் உடன் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் பெட்ரூமில் நுழைந்து அமெரிக்க படையினர் அவரையும், அவரது மனைவியையும் தூக்கினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் உள்ளனர்.
Operation Absoulte Resolve என்ற பெயரில் இந்த ஆபரேஷனை அமெரிக்க செய்து முடித்தது. அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கையின்போது சுமார் 100 வெனிசுலா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படை வீரர்களும் அடங்குவர். இதற்கிடையே தான் இன்னும் கூட அமெரிக்காவின் படை வீரர்கள் எப்படி வெனிசுலாவின் பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்? என்பதை ஆச்சரியமாக பேசி வருகின்றனர். தற்போது அதுபற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா இந்த ஆபரேஷனுக்காக புதிய வகை ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளது. அதுதான் சோனிக் ஆயுதம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி வெனிசுலா பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் கூறியுள்ளதாவது: ‛‛அமெரிக்க படைகள் நுழைந்தை அறிந்து நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் திடீரென எங்களின் ரேடார் அமைப்புகள் செயலிழந்தன. மொத்தமாக முடங்கின. அதற்குள் எங்களின் மேல்பகுதியில் ட்ரோன்கள் அதிகளவில் பறந்தன. உண்மையில் என்ன செய்ய வேண்டும்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக பலமாக இருந்தனர்.
நாங்கள் இதற்கு முன்பு சந்தித்த எதிரிகளை போல் அவர்கள் இல்லை. அனைத்து தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினர். நாங்கள் 100க்கும் அதிகமான வீரர்கள் இருந்தோம். ஆனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் துல்லியமாகவும், வேகமாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அமெரிக்காவின் ஒவ்வொரு வீரரும் நிமிடத்திற்கு 300 ரவுண்டுகள் சுடுவது போல் உணர்ந்தோம்
ஒரு கட்டத்தில் அவர்கள் வேறு ஒரு சாதனத்தை ப யன்படுத்தினர். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. அந்த சாதனத்தில் இருந்து தீவிரமான ஒலி அலை இருந்தது. அது என்னை நிலைகுலைய செய்தது. என் தலை உள்ளிருந்து வெடிப்பது போல் உணர்ந்தேன்.
அதுமட்டுமின்றி நாங்கள் உடலளவில் உடனடியாக பாதிப்பை சந்தித்தோம். மூக்கில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியது. சில வீரர்கள் ரத்த வாந்தி எடுத்தனர். நிலைக்குலைந்துபோய் நாங்கள் அடுத்தடுத்து தரையில் விழுந்தோம். எங்களால் நகர முடியவில்லை. அந்த ஒலி அலை ஆயுதத்திற்கு பின் எங்களால் எழுந்து கூட நிற்க முடியவில்லை'' என்றார்.
இதனை உறுதி செய்யும் வகையில் தான் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு செய்தார். அதாவது Mike Netter என்பவர் வெனிசுலா பாதுகாப்பு படை வீரரின் இண்டர்வியூவை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛அமெரிக்கப் படைகள் ரேடார் அமைப்புகளை முடக்கியது. ட்ரோன்கள் மூலமாக குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்தனர். அங்கு இருந்த வீரர்களை நிற்க முடியாத அளவுக்கு நிலைக்குலைய வைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். எங்களின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. வீரர்கள் ரத்த வாந்தி எடுத்தனர்'' என்ற முழு விவரம் இடம்பெற்றிருந்தது.
Stop what you are doing and read this…
— Karoline Leavitt (@PressSec) January 10, 2026
🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸 https://t.co/v9OsbdLn1q
அந்த பதிவிற்கு கரோலின் லிவிட், ‛‛நீங்கள் செய்வதை (அமெரிக்காவுக்கு எதிராக) நிறுத்தவிட்டு.. இதை படியுங்கள்'' என்று கூறியிருந்தார். இதனால் அந்த வீரர் சொன்னது உண்மை என்பது நிரூபமாணமாகிவிட்டது. ஆனால் கரோலின் லிவிட் சோனிக் ஆயுதம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
இந்த சோனிக் ஆயுதத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று High-intensity sonic weapons. இந்த ஆயுதம் என்பது போராட்டக்காரர்களை கலைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஆயுதத்தில் இருந்து அதிக அதிர்வெண்ணில் சத்தம் வெளியாகும். இதனால் போராட்டக்காரர்களின் காதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. 2வது ஆயுதம் infrasonic அல்லது very low frequency sonic weapons என்பார்கள். இது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எதிரி படைகளை இந்த ஆயுதத்தை கொண்டு நிலைக்குலைய செய்ய முடியும். Infrasonic ஆயுதத்தில் இருந்து அதிர்வெண் குறைந்த ஒலி எழுப்பப்படும். இது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளுறுப்பை சிதைக்கும். இதனால் மூக்கில் இருந்து ரத்தம் வருவது, ரத்த வாந்தி எடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை வீரர்கள் எதிர்கொண்டு மயங்குவார்கள். இதில் 2வது வகையான Infrasonic வகை ஆயுதத்தை தான் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா பயன்படுத்தி இருக்கலாம் என்று திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படியான ஆயுதங்களை இதற்கு முன்பு சீனா, நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதாவது கடந்த 2020ம் ஆண்டில் லடாக்கில் நடந்த எல்லை மோதலின்போது இந்திய வீரர்களுக்கு எதிராக மைக்ரோவேவ் ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனை சீனாவும், நம் நாடும் முற்றிலுமாக மறுத்தது. நம் நாடு சார்பில், ‛‛கிழக்கு லடாக்கில் மைக்ரோவேவ் ஆயுதங்களை சீனா பயன்படுத்தியதாக மீடியாக்களில் வெளியான ஆர்ட்டிக்கிள்கள் அடிப்படை ஆதாரமற்றது. அந்த செய்திகள் பொய்யானவை. அப்படி எந்த சம்பவமும் லடாக்கில் நடக்கவில்லை'' என்று கூறியிருந்தது.
இருப்பினும் தற்போது வெனிசுலா வீரர் கூறிய விஷயத்தை வைத்து பார்க்கும்போது அமெரிக்கா குறைந்த அதிவெண் கொண்ட ஒலி அலை ஆயுதத்தை பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்களை நிலைக்குலைய வைத்து அதிபர் நிகோலஸ் மதுரோவை தூக்கி இருக்கலாம் என்பது உறுதியாகிறது. இருப்பினும் இதுபற்றி அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த செயல்பாடு உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ளதோடு, புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications