உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3.. அமெரிக்காவும் ஹேப்பி.. ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தின் வெற்றி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல் கல் என்பது அனைவருமே அறிந்தது. சந்திரயான் 3 வெற்றியை அமெரிக்காவும் மிக முக்கியமாக கருதுகிறது. அது ஏன் என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, கடந்த 2019 ம் ஆண்டு சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2, 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்று வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்று வட்டப்பாதையை கடந்து 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23ல் நேற்று நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால் பதித்தது. லேண்டர் நேற்று மாலை நிலவில் கால் பதித்து சரித்திர சாதனை நிகழ்த்தியது. சந்திரயான் 3 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது இந்தியாவுக்கு மட்டும் இல்லை. அமெரிக்காவுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அது ஏன் என்ற விவரத்தை பார்க்கலாம்.
இந்தியா - அமெரிக்கா இடையே ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன் படிக்கையின் நோக்கம் என்னவென்றால், விண்வெளியில் அமைதியான, நிலையான மற்றும் வெளிப்படையான ஒத்துழைப்பிற்கு வலியுறுத்தப்படுகிறது. நாசா தலைமையிலான இந்த விண்வெளி ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் இடம்பெற்று இருக்கிறது. அதாவது, இதில் உள்ள விதிகளை ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்.
சந்திரன், செவ்வாய், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் என விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகள் உள்ளிட்டவற்றிற்கு இது பொருந்தும். இந்த ஆய்வுகளை பின்பற்றும்போது உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் எந்த மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை உடன்படிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், ஐக்கிய அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகள் இணைந்து ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2020 அக்டோபர் 13ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவுக்கு முன்பு கடைசியாக ஈக்வடார் 26வது நாடாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தங்களில் 10 முக்கிய விதிகள் உள்ளன. அதாவது, அமைதியான விண்வெளி ஆய்வு, வெளிப்படைத்தன்மை, பொதுவான ஆய்வு உள்கட்டமைப்பு மற்றும் தரநிலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டவர்கள் விண்வெளியில் அவசர உதவிகளை வழங்க வேண்டும். தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் போன்றவை முக்கிய விதிகள் ஆகும்.
அதுபோக நாசா வரும் 2025 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. நாசாவின் இந்த ஆய்வுக்கு இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வு மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.












Click it and Unblock the Notifications