கொரோனா.. உலகம் முழுக்க டொனால்ட் ட்ரம்ப்பால்தான் அதிக குழப்பம்.. ஆய்வில் பகீர்
வாஷிங்டன்: கொரோனா தொடர்பான ஆதாரப்பூர்வமற்ற பல வதந்திகளை பரப்பியதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
கார்னெல் பல்கலைக்கழக அறிவியல் பிரிவு நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது. தற்போது ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், அவர் செய்த குழப்பங்களை பட்டியலிட்ட இந்த ஆய்வும் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 26 வரை உலகெங்கிலும் உள்ள ஆங்கில மொழி, ஊடகங்கள் வெளியிட்ட 38 மில்லியன் கட்டுரைகளை கார்னெல் அலையன்ஸ் ஃபார் சயின்ஸின் குழு ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் வெளியான செய்திகள் இதில் அடங்கும்.

அதிசயம்
கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய தவறான தகவல்களை மீண்டும் பதிவு செய்தவை 522,472 செய்தி கட்டுரைகளாம். இதைத்தான் உலக சுகாதார அமைப்பு "இன்போடெமிக்" என்று அழைத்தது. அதாவது தவறான தகவல்களை கொடுத்து நோய் பரவச் செய்தல் என்று அர்த்தம். 11 முக்கிய துணை தலைப்புகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மிகவும் பிரபலமான தலைப்பு என்னவென்றால், "அதிசய குணப்படுத்துதல்" என்பதுதான். அதிசயமாக குணமாகும் என்று கூறி, 295,351 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மற்ற 10 தலைப்புகளை விடவும் இவைதான் ரொம்ப அதிகம்.

கிருமிநாசினி
ட்ரம்பின் கருத்துக்கள் "அதிசய குணப்படுத்துதல்" தலைப்பில் அதிக ஆதிக்கம் செலுத்தின. ஏப்ரல் 24 பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கொரோனா வைரஸை குணப்படுத்த உடலுக்குள் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தலாமே என்று ஒரு போடு போட்டார் ட்ரம்ப். இது அதிசயமாக நோய் குணமாகிவிடுமோ என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அமெரிக்க அதிபர்தான் காரணம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற நிரூபிக்கப்படாத சிகிச்சை முறையை அவர் ஊக்குவித்தபோதும் இதேபோன்ற செய்திகள் உலகமெங்கும் அதிகரித்தன. "ஆகவே, அமெரிக்க அதிபர்தான், தவறான தகவல்கள் அடங்கிய 'இன்போடெமிக்'யின் மிகப்பெரிய மூலாதாரம் என்று நாங்கள் முடிவு செய்கிறோம்," என்று ஆய்வுக் குழு எழுதியுள்ளது.

மக்களிடம் மெத்தனம்
ஆய்வுக்கு தலைமை தாங்கிய சாரா எவானேகா கூறுகையில்: "நோய் குறித்த அறிவியலற்ற மற்றும் ஆதாரமற்ற கூற்றுக்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டால், அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஏற்க மாட்டார்கள். இதனால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உள்ளது." என்றார்.
அதிசயமாக குணமாகிவிடும் என்ற கருத்துக்கு அடுத்தபடியாக, "புதிய உலக ஒழுங்கை" ஏற்படுத்த கொரோனா பரப்பப்பட்டது என்ற வதந்தியாம்.

சீனா சதி
இந்த தொற்றுநோய் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்கான ஒரு மோசடி என்பதும், அதைத் தொடர்ந்து சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தால் வைரஸ் கசிய விடப்பட்டது. இது ஒரு பயோ ஆயும் என்ற கருத்தும் அதிகம் புழங்கியுள்ளது. கொரோனாவுடன் பில் கேட்ஸை இணைத்தும் அவர் சதி செய்ததாகவும் பல வதந்திகள் செய்திகளாகியுள்ளன. 5 ஜி தொலைபேசி நெட்வொர்க்குகள், யூத எதிர்ப்பு சதி கோட்பாடுகள் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக திட்டம் என்றெல்லாம் இந்த வைரஸ் பற்றி தகவல் பரவியுள்ளது.

சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களில் இந்த வதந்திகள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்குழு கண்காணித்தனர், 36 மில்லியன் பதிவுகள் வதந்திகளாக சுற்றி வந்துள்ளன. அவற்றில் முக்கால்வாசி பேஸ்புக்கில்தான் பரப்பப்பட்டது. இந்த ஆய்வுக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஓரளவு நிதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications