20 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்? தடாலடியாக மிரட்டும் டிரம்ப்! தனித்தனியாக போன மெயில்! என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், ஒரு வாரத்தில் அலுவலகத்திற்கு வராவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பிரச்சாரத்தின் போதே பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதிபராகப் பதவியேற்ற உடன் தொடர்ச்சியாக இது குறித்து தடாலடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே இப்போது அமெரிக்க பெடரல் ஊழியர்களுக்கு டிரம்ப் புதுவித எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். இதன் மூலம் தனக்கு முன்பு அதிபர்களாக இருந்தோரால் செய்ய முடியாததைத் தான் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.
ஒர்க் பர்ம் ஹோம்
அதாவது இன்னும் ஒரு வாரம், அதாவது பிப்ரவரி 6ம் தேதிக்குள், ஒர்க் பர்ம் ஹோமை விட்டுவிட்டு ஆபீசுக்கு வேலைக்கு வராதவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். ஒர்க் பர்ம் ஹோம் முறையை நிறுத்த போவதாக டிரம்ப் அறிவித்திருந்த சூழலில், அதற்கேற்ப இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் அவர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். இதன் மூலம் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். எனக்கு முன்பு அதிபர் பதவியில் இருந்த 10 அதிபர்கள் இதைச் செய்யக் கடினமாக முயன்றனர். ஆனால், அவர்களால் அது செய்ய முடியவில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்து காட்டப் போகிறோம்" என்றார்.
20 லட்சம் ஊழியர்கள்:
OPM எனப்படும் அமெரிக்கப் பணியாளர் மேலாண்மை அலுவலகமும் பெடரல் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்து இருந்தது. உரியக் காலத்தில் அலுவலகத்திற்கு வராதவர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என குறிப்பிட்டு சுமார் 20 லட்சம் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டு இருந்தது. பிப்ரவரி 6ம் தேதிக்குள் பெடரல் ஊழியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் டிரம்பும் தடாலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனித்தனியாகப் போன மெயில்:
முன்னதாக ஓபிஎம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெடரல் ஊழியர்கள் நிச்சயம் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ராஜினாமா செய்யலாம். அவர்களுக்கு நியாயமான வெளியேறும் பேக்கேஜ் அளிக்கப்படும்.. ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்குச் செப்டம்பர் 30, 2025 வரை ஊதியம் மற்றும் பலன்கள் கிடைக்கும். இது தொடர்பாக ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளோம்" என்று கூறப்பட்டு இருந்தது.
என்ன காரணம்:
டிரம்ப் நிர்வாகம் அரசு செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பெடரல் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். இதன் மூலம் அரசு நிர்வாகம் சிறியதாகவும் திறமையானதாகவும் மாறும். எனக்கு முன்பு இருந்த அதிபர்களால் செய்ய முடியாததை நான் செய்கிறேன்.
அரசு ஊழியர்கள் வேறு வேலைகளிலும் சேர்ந்துள்ளதாகத் தகவல் வந்ததால் இந்த நடவடிக்கை. எனவே, அவர்கள் வேறு வேலையில் சேரவில்லை என்பதற்கான ஆதாரமும் கேட்கப்படலாம். அப்படி அவர்கள் வேறு வேலையில் சேர்ந்திருந்தால் அது சட்டவிரோதம்.. அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications