பணியாத ஈரான்.. கோர ‘அட்டாக்'கிற்கு ரெடியான டிரம்ப்? இஸ்ரேலில் இறங்கிய 6,500 டன் ஆயுதங்களின் பின்னணி
வாஷிங்டன்: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி அந்த நாட்டின் கடற்படையை முற்றுகையிடும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இது இருநாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலில் 6,500 டன் ஆயுதங்களை குவித்துள்ள நிலையில் ஈரான் மீது பெரிய தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராகி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருநாடுகள் இடையே போர் நின்றாலும் கூட மோதல் தொடர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி ஈரானும், அமெரிக்காவும் மோதி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி ஈரானின் கடற்கரை நகரங்களை குறிவைத்து அமெரிக்கா நகர்ந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் போர் நிறுத்தத்திற்கு பிறகு பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பாடாதது தான். ஈரான் எந்த காரணம் கொண்டும் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. அணுஆயுதம் தயாரிக்க கையில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். ஆனால் ஈரான் அதனை ஏற்கவில்லை.
தளபதிகளுடன் டிரம்ப் ஆலோசனை
இருநாடுகள் இடையே 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் ஈரான் அதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் இருநாடுகள் இடையே இன்னும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ராணுவம் உள்பட கூட்டு படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். அப்போது ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டங்கள் பற்றி அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இஸ்ரேலில் குவிக்கப்படும் ஆயுதங்கள்
இதற்கிடையே தான் அமெரிக்கா திடீரென்று 6,500 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்கள், ராணுவ தளவாடங்களை இஸ்ரேலில் குவித்துள்ளது. இந்த ஆயுத குவிப்புக்கு நடுவே டிரம்ப், தனது படை தளபதிகளுடன் ஈரான் விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனால் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து பெரிய போரை தொடங்குகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேலில் குவிக்கப்படுவதை ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தை மேற்கொள்காட்டி 'தி இஸ்ரேல் டைம்ஸ்' மற்றும் 'தி ஜெருசலேம் போஸ்ட்'ஆகிய நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், ''அமெரிக்காவில் இருந்து 6,500 டன் (6.5 மில்லியன் கிலோகிராம்) வான் மற்றும் தரைவழி தளவாடங்கள், ராணுவ லாரிகள், ஜேஎல்டிவி வாகனங்கள் உள்பட பிற ராணுவ உபகரணங்கள் இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இந்த ராணுவ தளவாடங்கள் 2 சரக்கு கப்பல்கள் மற்றும் பல விமானங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ தளவாடங்களை பகிர்ந்து கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து போர் நடவடிக்கையை தொடங்கியது. அப்போது முதல் அமெரிக்கா, இஸ்ரேலில் ராணுவ தளவாடங்களை குவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இஸ்ரேல் மொத்தம் 1,15,600 டன் ராணுவ தளவாடங்களைஅமெரிக்காவிடம் இருந்து பெற்றிருந்தது. அந்த வரிசையில் இப்போதும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது அடுத்த 'அட்டாக்'
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி ''ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கான புதிய திட்டத்தை 'சென்ட்காம்' எனும் அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு (United States Central Command or CENTCOM) தயாரித்தது. ஈரானை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டு வர அந்த நாட்டின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்த 'சென்ட்காம்' திட்டமிட்டு வருகிறது.
இந்த தாக்குதல் நீண்டகாலம் நீடிக்காது. குறுகிய கால தாக்குதலாகவும் அதேவேளையில் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது'' என செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications