ஹமாஸ் அமைப்புக்கு 3 நாள் தான் கெடு.. அதன்பிறகு இஸ்ரேல் களமிறங்கும் – டிரம்ப் மீண்டும் வார்னிங்
வாஷிங்டன்: காசாவில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசாவில் மீண்டும் அமைதித் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு ஹமாஸ் அமைப்பின் ஒப்புதல் அவசியம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு 2-3 நாட்கள் தான் கெடு. இதை ஏற்க மறுத்தால் மிகப்பெரிய சோகத்தில் முடியும் என்று ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா மீது கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் 65,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து, காசா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

20 அம்ச ஒப்பந்தம்
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தான் போரை போல, இந்தப் பிரச்சனைக்கும் அமெரிக்கா தான் மத்தியஸ்தம் செய்தது. அதன்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காசா போர் நிறுத்தம் செய்வதற்காக டிரம்ப் 20 அம்ச ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக டிரம்ப், நெதன்யாகு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிரம்பின் 20 அம்ச பரிந்துரைகளை ஏற்பதாக நெதன்யாகு அறிவித்தார். இதனை டிரம்பும் வரவேற்று நன்றி தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் ஒப்புதல்
டிரம்பின் 20 ஒப்பந்தப்படி போர் நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை வெளியேற்றுதல், பிணைக்கைதிகளை விடுவித்தல், ஹமாஸ் குழு ஆயுதங்களை கைவிடுதல், காசாவை மீளுருவாக்கம் செய்தல், காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன. நெதன்யாகு இதனை ஏற்றுக் கொண்டதால் காசாவில் அமைதித் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நெதன்யாகு, டிரம்பின் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால், அடுத்த 72 மணி நேரத்திற்குள் அனைத்து படைகளையும் திரும்ப பெற்று கொண்டு அமைதி திரும்ப பாடுபடுவோம். இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட மொத்த உலகமும் ஹாமாஸ் அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்.
ஹமாஸ்க்கு கெடு
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல், அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் கையெழுத்து போட்டுவிட்டன. ஹமாஸ் அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஹமாஸ் இதை ஏற்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் இதை ஏற்கவில்லை என்றால் இது மிகப்பெரிய சோகத்தில் தான் முடியும்.
ஹமாஸ் இயக்கத்திற்கு மொத்தமாக 2-3 நாட்கள் தான் கெடு. அதற்குள் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை கூற வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்." என்று எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் ஒப்பந்தத்தை, பாலஸ்தீனத்தின் மற்ற இயக்கங்களுடன் கலந்தாலோசனை செய்து கருத்து கூறுவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications