நிலநடுக்கம்! அதிர்ந்துபோன துருக்கி.. சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்! நெஞ்சை உறைய வைத்த வீடியோ
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை உலுக்க வைத்துள்ளது.
வாஷிங்டன்: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாட்டில் உள்ள கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை உலுக்க வைத்துள்ளது.
துருக்கி நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. துருக்கியின் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்
நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள நேரிட்டது.

2,300 பேர் பலி
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2,300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள், குடியிருப்பு கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் அப்படியே சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் கட்டிடங்கள் விழுந்து கிடப்பதால் மீட்பு பணிகளிலும் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன.

பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு
இந்தியாவும் இந்த துயரமான தருணத்தில் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து மாலை 4 மணியளவிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு மேலும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும், முழுவதுமாக முடிவடையாததால் பலி எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நொடிப்பொழுதில் தரைமட்டம்
நிலநடுக்கத்தால் துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டதால் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவில் மலை போல உயர்ந்து இருக்கும் கட்டிடங்கள் அப்படியே நொடிப்பொழுதில் தரைமட்டமாகி கிடக்கிறது.

சீட்டு கட்டுகள் போல சரிந்த கட்டிடங்கள்
துருக்கியின் சன்லியுர்பா மாகாணத்தில் 16 கட்டிடங்களும் ஒஸ்மானியே மாகாணத்தில் 34 கட்டிடங்களும் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சன்லியுர்பா மாகாணத்தில் பல மாடிகள் கொண்ட ஒரு அடுக்கு மாடி கட்டிடம் சீட்டு கட்டு போல அப்படியே சரிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியுள்ளனரா? என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.
|
மிக மோசமான நிலநடுக்கங்கள்
துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடந்த 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் வடகிழக்கு நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியானதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதேபோல் கடந்த 1999- ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications