"உயிரே போனாலும் அமெரிக்கா தான்.." உச்சமடையும் போராட்டம்.. திடீரென எலான் மஸ்க் சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: அமெரிக்காவில் எலான் மஸ்கிற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர் டாஜ் துறையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இதுபோன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எலான் மஸ்க், தான் உயிரிழந்தாலும் கூட அமெரிக்காவிலேயே உயிரிழப்பேன் எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகின் மாபெரும் கோடீஸ்வரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் என ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி அதை எக்ஸ் என்று பெயரை மாற்றி நடத்தி வந்தார். தொழில்துறையில் சாதித்து வந்த எலான் மஸ்க் திடீரென கடந்தாண்டு அரசியலிலும் குதித்தார்.

எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நடந்த நிலையில், அதில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பிற்காக அவர் பிரச்சாரம் செய்தார். ஊர் ஊராக டிரம்பிற்காக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்த நிலையில், அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதனால் டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் எலான் மஸ்க் இடம்பிடித்தார். அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், எலான் மஸ்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் டாஜ் துறையை ஒதுக்கினார்.
டாஜ் துறையில் அவரது நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இதனால் அமெரிக்கர்கள் எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் எனப் பலரும் சாடி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்கா மீதான தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உயிரே போனாலும் அமெரிக்கா தான்
சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், "நான் அமெரிக்காவில் தான் இறப்பேன்.. நான் வேறு எங்கும் செல்லமாட்டேன். நான் செவ்வாய் கிரகத்திற்குக் கூட செல்லலாம். ஆனால் அது நிச்சயம் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
எங்கு பேசினார்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விஸ்கான்சின் உச்ச நீதிமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், எலான் மஸ்க் தரப்பு பிராட் ஷிமெலுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிராட் ஷிமெல் ஒரு பழமைவாதியாக அறியப்படுகிறார். அவருக்கு எதிராக லிபரல் சிந்தனை கொண்ட சூசன் க்ராஃபோர்டு போட்டியிடுகிறார். டிரம்ப் தனது கொள்கைகளைச் செயல்படுத்தும் நிலையில் பிராட் ஷிமெல் வெற்றியும் டிரம்பிற்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.

ஏன் முக்கியம்
இந்தத் தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்தத் தேர்தல் தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விஸ்கான்சின் உச்ச நீதிமன்றத்தின் சித்தாந்த சமநிலையை நிர்ணயம் செய்வதாக இருக்கும். மேலும், விஸ்கான்சின் மாகாணத்தின் மேஜர் முடிவுகளை நிர்ணயம் செய்யும் உச்சபட்ச நீதி அமைப்பாக இருக்கும். இதன் காரணமாகவே எலான் மஸ்க் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், பிராட்டிற்காக எலான் மஸ்க் தரப்பு சுமார் 20 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஸ்கான்சினில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க் இரு வாக்காளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு $1 மில்லியன் காசோலைகளை வழங்கினார். அவர்களை பிராட் ஷிமெலின் ஆதரவு குழுவின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தார். வரவிருக்கும் விஸ்கான்சின் உச்ச நீதிமன்றத் தேர்தல் மிகவும் முக்கியம் என குறிப்பிட்ட எலான் மஸ்க், டிரம்பின் திட்டங்களுக்கும் அமெரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் இது முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எலான் மஸ்க் பேச்சு
தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், "இது ஒரு மிக முக்கியமான தேர்தல்.. இதன் காரணமாகவே நான் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மட்டும் பங்கேற்காமல் நேரடியாக வந்துள்ளேன். இந்தத் தேர்தலின் முடிவு அமெரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தேர்தல். மேலும், விஸ்கான்சினில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் அதிகாரம் மாகாண சுப்ரீம் கோர்ட்டிற்கு தான் இருக்கிறது.
அவர்கள் (எதிர் தரப்பு) வென்றுவிட்டால் குடியரசு கட்சியினர் அதிகம் இருக்கும் பகுதிகளை எல்லாம் ஒரே தொகுதியாகப் பிரித்து நமக்குக் கிடைக்கும் சீட்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுவார்கள். எனவே இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமானது" என்றார். அப்போது தான் அமெரிக்கா குறித்த கேள்விக்குத் தான் அமெரிக்காவிலேயே உயிரிழப்பேன் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.
எலான் மஸ்க் தான் அமெரிக்காவை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதைக் காட்டவே இதுபோன்ற கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஏனென்றால் டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்காவில் நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
டிரம்பின் ஆதரவு
அதேநேரம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் டிரம்பின் ஆதரவு எலான் மஸ்கிற்கே இருக்கிறது. அதை அவர் வெளிப்படையாகக் காட்டியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே வெள்ளை மாளிகையிலேயே வைத்து டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியிருந்தார். மேலும், டெஸ்லா பங்குகளில் முதலீடு செய்வதையும் டிரம்ப் ஊக்குவித்து இருந்தார். டிரம்ப் என்ன தான் இவ்வளவு ஆதரவு தெரிவித்தாலும் டெஸ்லா விற்பனை சரிகிறது. டெஸ்லா பங்குகளும் சரிந்தே வருவது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் குடியுரிமை
எலான் மஸ்க்கை பொறுத்தவரைப் பலரும் நினைப்பது போல அவர் அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை. உண்மையில் அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் கடந்த 1971ல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பு வரை தென்னாப்பிரிக்காவில் தான் படித்தார். அதன் பிறகு சில காலம் கனடாவில் படித்த அவர் 1990களில் தான் அமெரிக்கா வந்தார். தென்னாப்பிரிக்காவில் பிறந்ததால் அவருக்கு தென்னாப்பிரிக்கக் குடியுரிமை இருக்கிறது. மேலும், கனடா மற்றும் அமெரிக்கக் குடியுரிமைகளையும் அவர் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் ஒருவர் பல்வேறு வழிகளில் அந்நாட்டின் குடியுரிமையைப் பெறலாம். குறிப்பிட்ட ஆண்டுகள் அமெரிக்காவில் உரிய விசா பெற்றுத் தங்கியிருப்பது, அமெரிக்காவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வது உள்ளிட்டவை மூலம் குடியுரிமையைப் பெறலாம். அதுபோல தான் எலான் மஸ்க் கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். என்னதான் அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தாலும் இப்போது டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்று இருந்தாலும் கூட அவரால் அமெரிக்க அதிபராகவே முடியாது. ஏனென்றால் அமெரிக்காவில் பிறந்த ஒருவர் மட்டுமே அதிபராக முடியும் என்பதை அந்நாட்டுச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.












Click it and Unblock the Notifications