"ட்விட்டர் ஆபீசுக்கு வர வேண்டாம்.. அப்படியே போய்விடுங்க!" ஒரே மெயிலில் பலர் நீக்கம்.. மஸ்க் அடாவடி
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அவரது பல நடவடிக்கைகள் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற டெக் நிறுவனங்கள் நல்ல அளவில் வளர்ச்சி அடைந்த போதிலும், ட்விட்டர் நிறுவனத்தால் பெரியளவில் வளர்ச்சி அடைய முடியவில்லை. அதன் பங்குகளும் சரிவையே சந்தித்தன.
உலகளவில் பல கோடி மக்கள் ஆக்டிவ் யூசர்களாக இருக்கும் போதிலும், ட்விட்டர் நிறுவன்தால் வருமானத்தை அதிகரிக்க முடியவில்லை. இதனால் போர்ட் உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

ட்விட்டர்
இந்தச் சூழலில் தான் ட்விட்டர் தளத்தை ஒட்டுமொத்தமாக வாங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். இடையில் அவர் பின்வாங்கிய போது, கேஸ் போடுவதாக போர்ட் உறுப்பினர்கள் மிரட்டினர். இதையடுத்து கடந்த மாதம் ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக வாங்கினார் எலான் மஸ்க். தொடக்கம் முதலே அவர் துளியும் நேரத்தை வீணடிக்காமல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எலான் மஸ்க்
முதல் எடுத்த உடன் அவர் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகளை வேலையைவிட்டுத் தூக்கினார். மேலும் ப்ளூ டிக் பெறத் தனியாகக் கட்டணம் என்ற முறையையும் அறிவித்தார். இதற்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், அதையெல்லாம் எலான் மஸ்க் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ப்ளுடிக்கிற்கு 8 டாலர் என்பதில் அவர் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

ஆட்குறைப்பு
இதற்கிடையே அடுத்தகட்டமாக ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கும் நடவடிக்கையிலும் கூட சைலென்டாக இறங்கிவிட்டார். அதாவது ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டனரா என்பது குறித்த தகவல்களை மெயிலில் அனுப்பி வருகின்றனர். காலை 9 மணிக்குள் அனைவருக்கும் இந்த மெயில் அனுப்பப்படும் என்று நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது,

மெயில்
ஊழியர்களுக்கு அனுப்பப்படும் அந்த மெயிலில், "ட்விட்டரை ஆரோக்கியமான பாதைக்குக் கொண்டு வர சில கடினமான நடவடிக்கை தேவைப்படுகிறது. இதற்காக ட்விட்டர் பணியாளர்களைக் குறைக்கும் கடினமான செயல்முறை தேவைப்படுகிறது. ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. அனைத்து பணியாளரின் பாதுகாப்பு மற்றும் டேட்டா பாதுகாப்பை உறுதி செய்ய பேட்ஜ் அக்சஸ் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

கட்டாயம்
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்குத் தனிப்பட்ட முறையில் மெயில்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல இந்த பணிநீக்கத்தில் தப்பியவர்களுக்கும் தனியாக மெயில் அனுப்பி வைக்கப்படுமாம். நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றச் செலவைக் குறைக்க வேண்டியது கட்டாயம் என்று எலான் மஸ்க் கூறிய நிலையில்,, இந்த அதிரடி நடவடிக்கையை ட்விட்டர் எடுக்கத் தொடங்கி உள்ளது.

எதிர்பார்த்த ஒன்றுதான்
அதேநேரம் இந்த பணிநீக்கம் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். மஸ்க் பதவியேற்றதும் இப்படி நடவடிக்கை வரும் என அனைவரும் எதிர்பார்த்தே இருந்தனர். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் யாரும் பெரியளவில் அதிர்ச்சியடையவில்லை. இந்த மெயில் வந்த பிறகு, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அதிகாரப்பூர்வ க்ரூப்களில் குட்பை மெசேஜ் அனுப்பிவிட்டு வெளியேறி வருகின்றனராம்.

வர வேண்டாம்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மெயிலில், "நீங்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம். அப்படி ஏற்கனவே கிளம்பி இருந்தால், தயவு செய்து திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல வரும் காலத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications