உச்சத்தில் கடன்.. அமெரிக்கா திவாலாக போவது உறுதி.. எச்சரிக்கும் எலான் மஸ்க்.. இதென்ன புது பிரச்சினை
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் கடன் அதிகமாக இருக்கும் நிலையில், அதன் செலவுகளைக் குறைக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் புதிதாக ஒரு துறையை உருவாக்கியுள்ளார். அதற்கான தலைவராக எலான் மஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் நிதிநிலை மிக மோசமாக இருப்பதாகவும் இதனால் அமெரிக்கா திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் இப்போது தனது நிர்வாகத்தில் உள்ள அமைச்சர்களைத் தேர்வு செய்து வருகிறார். அதன்படி அமெரிக்க அரசின் அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்த தனி அமைச்சரவையை உருவாக்கி அதற்குத் தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்துள்ளார்.

எலான் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய போது எலான் மஸ்க் என்ன செய்தார் என்பது பலருக்கும் நினைவு இருக்கும். அதில் வேலை செய்து வந்த பெரும்பாலான ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய எலான் மஸ்க், செலவுகளையும் கணிசமாகக் குறைத்திருந்தார். எனவே, சரியான ஆளையே டிரம்ப் நியமித்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்காவின் நிதிநிலை ரொம்பவே மோசமாக இருப்பதாகவும் அது மிக விரைவில் திவாலாகும் ஆபத்து இருப்பதாகவும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு 6.16 டிரில்லியன் டாலர்களை செலவழித்த நிலையில், வெறும் 4.47 டிரில்லியன் டாலர்களை மட்டுமே வருவாயாகக் கொண்டு வந்து இருந்ததாக ட்வீட் செய்யப்பட்டு இருந்தது.
திவால்: மேலும், இந்த டிரெண்டை நாம் மாற்றியமைக்க வேண்டும்.. பட்ஜெட்டை சமநிலைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க், "அமெரிக்கா இப்போது மிக வேகமாகத் திவால் நிலையை நோக்கிச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்திலேயே டிரம்ப் அரசின் செலவுகளைக் குறைக்கப் போவதாக, குறிப்பாக வீண் செலவுகளைக் குறைக்க DOGE- Department of Government Efficiency என்ற துறையை உருவாக்குவதாக அறிவித்து இருந்தார். அதிபர் தேர்தலில் வென்றவுடனேயே சொன்னது போலவே இந்த துறைக்குத் தலைவராக எலான் மஸ்க்கையும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன்: இந்தியாவுக்கு இப்போது 682 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுக்கு கடன் இருக்கத் தான் செய்யும்.. ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவுக்கும் கூட கடன் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆனால், உண்மையில் அமெரிக்காவின் தேசியக் கடன் சுமார் 34 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது. இது இந்தியாவுக்கு இருக்கும் கடனை விடப் பல மடங்கு அதிகமாகும். கொரோனா காலகட்டத்தில் அந்நாட்டு அரசு மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அந்நாட்டின் கடன் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும்.
டிரம்ப்: மேலும், பொதுவாகவே குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் தொழிலதிபர்களுக்கு சாதகமான கொள்கைகளை வைத்து இருப்பார்கள். சந்தை தான் அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்றும் அரசு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது. தேவையற்ற செலவுகளைச் செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் தான் குடியரசு கட்சியினர். அதிலும் டிரம்ப் இந்த கொள்கைகளை ரொம்பவே பின்பற்றுவார். இதனால் டிரம்ப் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரது அரசு செலவுகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பெரியளவில் குறைக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications