நடு வானில் விமானத்தின் என்ஜினில் தீ.. அச்சத்தில் உறைந்த பயணிகள்.. அவசரமாக தரையிறக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜினில் தீ பிடித்ததால் அவசர அவசரமாக விமானம் தரையிறங்கியுள்ளது. பயணிகளுக்கு பெரும் பீதியை கொடுத்த இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் போயிங் 737- 1958 என்ற விமானம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்டு நடு வானில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் பறவைகள் மோதின. இதில் விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்தது.

உடனடியாக இது குறித்த எச்சரிக்கையும் விமானிக்கு கிடைத்ததால் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்க விமானி அருகில் இருந்த ஒஹியோ விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டார். விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்ததும் ஒஹியோ நகரத்தில் உள்ள ஜான் கிளென் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வேகமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் தயாராக இருந்த டெக்னிக்கல் குழுவினர் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளை மாற்று விமானத்தில் விமான நிறுவனம் பீனிக்ஸ் நகருக்கு அனுப்பி வைத்தது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையகரகமும் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. நடு வானில் திடீரென விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததாக விமானி சொன்ன தகவலால் அதிர்ச்சியில் உறைந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த பயணி கூறுகையில், " விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது.
அப்போது விமானம் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் பறவைகள் விமானத்தில் என்ஜினில் மோதி விட்டதாக விமானி கூறியதாக சொல்லப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எங்களை உடனடியாக வேறு விமானத்தில் அனுப்பி வைத்தனர்" என்றார். விமானம் தீப்பொறிகள் பறந்த படி வானில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications