இந்தியர்களுக்கு சிக்கல்? திடீரென "ஹெச் 1பி விசா" ரூல்ஸை மாற்றிய அமெரிக்கா.. மிக முக்கிய அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு வெளிநாட்டவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இப்போது அமெரிக்க விசா வழங்குவதில் முக்கியமான ரூல்ஸ் மாற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்குச் செல்லும் அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக அமெரிக்கா செல்லும் ஐடி வல்லுநர்களை இது மோசமாகப் பாதிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இதுபோல அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

மேஜர் மாற்றம்
இதற்கிடையே இப்போது திடீரென விதிகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் அமெரிக்க விசாக்களுக்கு நேர்காணல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராப் பாக்ஸ் (Dropbox) எனப்படும் நேர்காணலைத் தவிர்க்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெச்-1பி (H-1B), எல்1 (L1), எஃப்1 (F1) என கிட்டத்தட்ட எந்தவொரு விசாவாக இருந்தாலும் அதைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக அமெரிக்கத் தூதரகங்களுக்கு நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தாமதம் ஏற்படும்
அமெரிக்காவின் ஹெச்-1பி விசாவை அதிகம் பெறும் நாடாக இந்தியா இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த மாற்றம் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகக் காத்திருப்பு காலம் அதிகமாகும். மேலும், சரியான நேரத்தில் சென்று சேர முடியாதவர்கள் பணியைக் கூட இழக்கும் அபாயம் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இனிமேல் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, எல்லாவற்றுக்கும் ஏற்றபடி ரெடியாகும்படி வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுவரை, இந்த டிராப் பாக்ஸ் வசதி பலருக்கும் உதவியது. இதன் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை ஒரு குறிப்பிட்ட மையத்தில் சமர்ப்பிப்பதால் போதும்.. நேரில் நேர்காணலுக்கு வரத் தேவையில்லை. ஆனால், இந்த புதிய விதிகளின்படி, பெரும்பாலான விசா வகைக்கு நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓரிரு வகை விசாவுக்கு மட்டும் இப்போது நேர்காணல் தவிர்க்கும் திட்டம் இருக்கிறது.
இந்தியர்களுக்குச் சிக்கல்?
அமெரிக்காவின் இந்த திடீர் அறிவிப்பு அங்கு ஐடி ஊழியர்கள் அதிகம் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கையே கடுமையாகப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அங்குள்ள பெரும்பாலான ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு இது பெரிய சிக்கலாக மாறும். கடந்த 2022ஆம் ஆண்டில், வழங்கப்பட்ட 3.2 லட்சம் ஹெச்-1பி விசாக்களில் 77% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல 2023ல் வழங்கப்பட்ட 3,.86 லட்சம் ஹெச் 1பி விசாக்களில் 72.3% இந்தியர்களுக்கு வந்தது.
இந்தச் சூழில் திடீர் விதி மாற்றம் இந்தியர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். இது தொடர்பாக சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகக் குடியேற்ற ஆய்வுப் பேராசிரியர் பில் ஹிங் கூறுகையில், "விசா பிராசஸை இது தாமதமாக்குகிறது. விசா வைத்திருப்பவர்கள் நேர்காணல் முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.. இதன் மூலம் சரியான நேரத்தில் பணிக்கு சேர முடியாமல் போகலாம். இதனால் வேலைக்கே சிக்கல் வரலாம்" என்றார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இப்போது இந்தியாவில் உள்ள தூதரகங்களில் காத்திருப்பு நேரம் மிக மிக அதிகமாக இருக்கிறது. சரியான நேரத்தில் அவர்களுக்கு நேர்காணல் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பணி அனுமதியை இழக்க நேரிடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த விதி மாற்றத்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் விசா வேண்டி விண்ணப்பிப்போர் அதை மனதில் வைத்துக்கொண்டு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications