மீண்டும் அதிபரான டிரம்ப்.."இந்துக்கள் உற்சாகமாக இருக்கிறோம்!" இந்திய வம்சாவளியினர் சொல்வது என்ன
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். அதிபராகப் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய டிரம்ப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், திங்கள்கிழமை அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கனவே கடந்த 2017- 2021 காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். அதிபரான உடனேயே அவர் பல மேஜர் நடவடிக்கைகளை எடுப்பார் என்றே தெரிகிறது.
இந்தியர்கள் சொல்வது என்ன:
குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு வாழ்ந்து வரும் நிலையில், அது தொடர்பாக மேஜர் நடவடிக்கைகளை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மிகப் பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அங்குள்ள இந்து சமூகத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை டிரம்ப் நிச்சயம் எடுப்பார் என்று அங்குள்ள இந்திய வம்சாவளியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் கூறுகையில், "இங்கே உள்ள அனைத்து இந்துக்களும் உற்சாகமாக உள்ளனர். அவர் (டிரம்ப்) இந்து மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இந்துக்களுக்குச் சாதகமான நடவடிக்கைகளை அவர் நிச்சயம் எடுப்பார். அவருக்கும் கூட இந்து மதத்தின் மீது அதீத நம்பிக்கை உள்ளது" என்றார்.
என்ன எதிர்பார்க்கிறார்கள்:
டிரம்ப் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்பது குறித்து மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கூறுகையில், "டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம். இருப்பினும், பதவியேற்ற உடனேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம்.
முதல் ஆறு மாதங்களில் அவர் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அதன் பிறகே சொல்ல முடியும். நான் டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவன் இல்லை. ஆனாலும், சட்ட விரோத குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கே வாக்களித்துள்ளேன். இதைத் தடுக்க அவர் நடவடிக்கை எடுப்பான் என நம்புகிறேன்" என்றார்.
சீக்கியர்கள் சொல்வது என்ன
அங்குள்ள சீக்கிய மதத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் கூறுகையில், "காலிஸ்தானி விவகாரம் அமெரிக்காவில் பிரச்சினையாக மாறி வருகிறது. இதில் டிரம்ப் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறேன். அப்பாவி சீக்கியர்கள் காலிஸ்தானி விவகாரத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஒரு சீக்கியராக எது சரி, எது தவறு என்பதை சக சீக்கியனுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. டிரம்ப் நிர்வாகம் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன்.
நீதிக்கான சீக்கிய அமைப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுன் உள்ளிட்ட காலிஸ்தானி குழுக்கள் வன்முறை பாதையில் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு மோசமான செயல்களைச் செய்து வருகிறார்கள். எனவே அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications