எழும்பாத ஜோ பிடன் அலை.. கொரோனாவுக்கு இடையே.. டிரம்ப் மக்கள் ஆதரவை பெற்றது எப்படி? கள நிலவரம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஆரம்பத்தில் ஜோ பிடன் முன்னிலை பெற்றாலும், டொனால்ட் ட்ரம்ப் மக்கள் ஆதரவை அதிகம் பெற்று உள்ளதால் கடுமையான போட்டி நிலவுகிறது.
டிரம்புக்கு மக்கள் ஆதரவளிக்க என்ன காரணம்? ஜோ பிடன் பெரிய வெற்றியை ஈட்ட முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் கூறியதை போல அமெரிக்காவில் ஜோ பிடன் அலை வீசவில்லை. இதற்கு முக்கியமான காரணம், கருத்துக்கணிப்பு கேட்டவர்கள், சில விஷயங்களில் கோட்டை விட்டுள்ளனர்.
வென்றுவிட்டோம்.. அவசர அவசரமாக வெற்றியை அறிவித்த டிரம்ப்.. பின்னணியில் இருக்கும் பரபரப்பு காரணம்!
கருத்துக் கணிப்பு
குறைந்த வருவாய் பிரிவினர், ப்ளூ காலர் பணியாற்றுவோர், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவளிக்கும் வெள்ளை இன மக்கள் உள்ளிட்ட தரப்பு பலரிடமும் கருத்துக்கணிப்பு கேட்டவர்கள் கருத்து கேட்காமல் கோட்டை விட்டுள்ளனர். அதுவும் இந்த முறை தொலைபேசி வாயிலாகத்தான் கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. எனவே தான் சரியாக கணிக்க முடியவில்லை என்கிறார்கள். ஆரம்பத்தில் ஜோ பிடன் முன்னிலையில் இருந்த மாகாணங்களில் கூட, டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற தொடங்கியுள்ளார். வடக்கு கரோலினா, அயோவா, பென்சில்வேனியா போன்ற ஒவ்வொரு மாகாணங்களிலும் வெற்றி பெறுகிறார்.
பொருளாதார நடவடிக்கை
டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாக்களிப்பவர்கள் கருப்பினத்தவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள், பெரும்பாலானவர்கள் வெள்ளையினத்தவர்களாக இருப்பதால் அவர்கள் தொடர்ந்து டிரம்புக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பது ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு. ஆனால் அமெரிக்கர்களை இனவெறியர்கள் என்று குறுகிய வட்டத்தில் அடக்கிவிட முடியாது. இனமும் ஒரு முக்கியமான பங்காற்றி இருக்கலாம் என்ற போதிலும் கூட, பொருளாதார மேம்பாட்டுக்கு டொனால்ட் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே
தேக்கமடைந்து இருந்த அமெரிக்க பொருளாதாரத்தை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உயர்த்த ஆரம்பித்தது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு அவர்களின் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதற்கு வழி செய்தார் என்றும், இதற்காக எந்த நாட்டுடனும் முகத்தை முறைத்துக் கொள்ள அவர் தயங்கியதே கிடையாது.
தேக்க நிலை
1980கள் மற்றும் 1990களில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் ஒரேமாதிரியாக நிலைபெற்றுவிட்டது. தேக்கம் அடைந்து விட்டது என்ற ஏக்கம் பலருக்கு இருக்கிறது. அவர்கள் டொனால்ட் டிரம்ப்பிடம் தங்களின் மனசாட்சியை பார்க்கிறார்கள். அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்தாலும் அது அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
டிரம்புக்கு அதிக ஓட்டு
இப்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தால் 65% அமெரிக்கர்கள் டொனால்டு டிரம்ப்புக்கும், 35 சதவீதம் பேர் ஜோ பிடனுக்கும் ஆதரவு அளிக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். இது ஓட்டு சதவீதம் அடிப்படையிலானது அல்ல. ஆனால் நிலைமை மாறிய வேகத்தை வைத்து கூறப்படும் கணிப்பு. ஒருவேளை கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் இருந்திருந்தால் டொனால்டு டிரம்ப் வெற்றி இன்னும் எளிதாக இருந்திருக்கும். இந்தப் பெரிய தொற்று காலத்துக்குப் பிறகும் கூட இத்தனை பேர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அவரது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு என்ற அவரது நிலைப்பாட்டுக்கும் கிடைத்த பரிசு என்கிறார்கள் அங்குள்ள அரசியல் விமர்சகர்கள்.
கொரோனா தாக்கம் இல்லையா?
கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு இருந்தாலும், அதற்கு டொனால்ட் ட்ரம்ப் காரணமில்லை என்று அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். கொரோனா காலத்துக்கு முன்பாக அமெரிக்க பொருளாதாரம் எப்படி இருந்தது? அதை எப்படி நிர்வகித்தார் என்பதை பிரித்து அறிந்து பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள். சீரான பொருளாதார வளர்ச்சியை அவர் கொண்டு வந்தார். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர மக்களுக்கு நல்லது செய்தார். இதன் மூலமாக சுமார் 10% வாக்குகள் அவரை நோக்கி திரும்பி இருக்கும் என்கிறார்கள் அங்குள்ள விமர்சகர்கள்.
முக்கிய மாகாணங்கள் டிரம்ப் வசம்
அப்படியானால், கொரோனா நோய் பரவல், மற்றும் கருப்பினத்தவர்களுக்கு எதிரான காவல்துறையினர் தாக்குதல் மற்றும் அவர்களின் போராட்டம் போன்ற சமூக பதட்ட நிலை டொனால்ட் ட்ரம்ப் க்கு எதிராக மாறவில்லையா? என்ற கேள்வி எழலாம். மக்கள் பொருளாதாரத்தை மனதில் வைத்து ஓட்டு போட்டு உள்ளார்கள் என்று தான் ரிசல்ட்டை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். உலகமே உற்றுப் பார்த்த புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டெக்சாஸ் டொனால்ட் ட்ரம்ப் வசம் வந்துள்ளது. எனவே வெற்றி- தோல்வி இழுபறி நிலை ஏற்பட்டால், தபால் வாக்குகள் இந்த வெற்றியை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். தபால் வாக்குகள் பெரும்பாலும் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்படுவது கிடையாது. ஒரு நாள் ஆகலாம் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்.
இழுபறி நிலை
அது மட்டும் கிடையாது.. சட்டப்படியாக இந்த வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றங்களுக்கும் செல்லலாம் என்பதால், அமெரிக்க அதிபராக யார் பதவிக்கு வருவார், என்பதை பல வாரங்கள் கழித்து கூட முடிவு செய்யும் நிலைமை ஏற்படலாம். இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் யாராவது ஒரு தரப்பு பெரும்பாலான எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இப்போது சாத்தியமில்லை.