"மூச்சுவிடவே முடியல.." காற்று மாசில் திடீரென டெல்லியை ஓவர்டேக் செய்த நியூயார்க்.! என்ன நடந்தது
வாஷிங்டன்: கனடா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, இப்போது அதிக மாசடைந்த நகரமாக நியூயார்க் மாறியுள்ளது. அங்கே மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் இப்போது பற்றி எரியும் காட்டுத் தீ மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பல லட்சம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 ஆயிரம் பேர் ஏற்கனவே ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டு தீயில் இருந்து வெளியேறும் புகை கனடாவை தாண்டி அமெரிக்காவிலும் பல பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகை அமெரிக்கக் கிழக்குக் கடற்கரை மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரம், உலகளவில் அதிக காற்று மாசை கொண்ட நகரமாக மாறியுள்ளது. டெல்லியில் எப்போதும் காற்று மாசு மிக மோசமாக இருக்கும். ஆனால், இப்போது நியூயார்க்கில் இருக்கும் காற்று மாசு டெல்லியையே விஞ்சிவிட்டது. நியூயார்க் நகரத்தின் அழகிய மற்றும் புகழ்பெற்ற இடங்கள் எல்லாம் கனடாவின் காட்டுத்தீயால் புகை மண்டலமாக மாறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் பைடன், "அபாயகரமான காற்று மாசு சூழ்ந்துள்ளது. பாதிக்கப்படும் பகுதியில் உள்ளவர்கள் அங்கே உள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.. இக்கட்டான நிலையில் இருக்கும் கனடாவுக்கு உதவத் தயாராகவே உள்ளோம். ஏற்கனவே காட்டுத் தீயை சமாளிக்க 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
IQAir தரவுகளின்படி, உலகின் முக்கிய நகரங்களிலேயே அதிக காற்று மாசை கொண்ட நகரமாக இருந்த டெல்லியை நியூயார்க் ஓவர்டேக் செய்தது. டெல்லியில் காற்றின் தரம் 164ஆக இருந்த நிலையில், நியூயார்க் நகரின் காற்றின் தரம் அதைவிட மோசமான நிலைக்குச் சென்று 173ஆகப் பதிவாகியுள்ளது. இந்த கடும் புகையால் அங்கே சில மீட்டர் தூரத்திற்கு மேல் பார்க்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பல நூறு விமானங்கள் தாமதமாகியுள்ளன.
நியூயார்க் மட்டுமின்றி, மேரிலாந்து, நியூ ஹாம்ப்ஷயர் எனப் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. வில்மிங்டன், டெலாவேர் பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 199 மேல் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளது. அங்கே வசிக்கும் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனடாவில் இப்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. அங்கே சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாம். கனடா வரலாற்றில் இதுபோன்ற மிக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டதே இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக 3.8 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேலான காடுகள் இந்த தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு இருந்த பல ஆயிரம் வனவிலங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புகை சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்போர் மாஸ்க் அணிந்து வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications