கண்ணாடி கிளாஸை கூட பிடிக்க முடியாது! சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு! வெளியான தகவல்
வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களை வானியற்பியல் நிபுணர் நீல் டி கிராஸ் டைசன் பகிர்ந்து கொண்டுள்ளார். 9 மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸின் உடல் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சரிசெய்ய சில காலம் எடுத்துக் கொள்ளும் என டைசன் தெரிவித்துள்ளார்.
சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் நேற்றைய தினம்தான் பூமி திரும்பினார். இத்தனை காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த அவரது உடல்நிலை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அவரது உடல் பூமிக்கு ஏற்றபடி மாற மேலும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வானியற்பியல் நிபுணர் நீல் டி கிராஸ் டைசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை
இது குறித்து அவர் கூறுகையில், "சீக்கிரமே அவர்களின் எடையை அவர்களது தசைகள் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக மாறும். சர்வேச விண்வெளி மையத்தில் இருந்தபோதும் அவர்கள் அங்கு உடற்பயிற்சி செய்தே வந்தனர். அதற்கு அங்குப் பல வழிகள் இருந்தன. எனவே அது பிரச்சினை இல்லை. விஷயம் என்னவென்றால் அதிக காலம் விண்வெளியில் எடையற்ற சூழலில் இருக்கும் போது பூமியில் புவி ஈர்ப்பு விசையால் ஒரு விஷயம் எங்கே எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கும் திறன் உங்களுக்குக் குறைந்துவிடும். ஏனென்றால் விண்வெளியில் இதை நீங்கள் செய்திருக்கவே மாட்டீர்கள்.
கண்ணாடியைக் கூட பிடிக்க முடியாது
நான் இதுவரை விண்வெளிக்குச் சென்றது இல்லை. ஆனால் விண்வெளி வீரர்களிடம் பேசியிருக்கிறேன். பல நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பியவர்களிடம் பேசியுள்ளேன். பெரும்பாலும் ஒரு வாரத்தில் நார்மல் ஆகிவிடுவார்கள் என்றே கூறினர். விண்வெளியில் இத்தனை காலம் இருந்ததால் இப்போது அவர்களின் தசைகள் பலவீனமாக இருக்கும். ஒரு கண்ணாடி கப்பை கொடுத்தால் அதைக் கூட பிடிக்க முடியாது. எனவே, இப்போது அவர்கள் சில நாட்கள் பிளாஸ்டிக் கப்பை தான் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
இத்தனை காலம் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்புவதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் மனநிலை பாதிக்கப்படலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நாசா அதன் விண்வெளி வீரர்களை உடல் பலம் மட்டுமின்றி, மன வலிமையையும் கணக்கில் கொண்டே தேர்வு செய்கிறது.
அனுதாபம் தேவையில்லை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்களுக்கு போதுமான உணவும் தண்ணீரும் இருந்தது (விண்வெளியில் தண்ணீர் என்பது மறுசுழற்சி செய்யப்பட்ட சிறுநீர் தான்). மேலும், அவர்கள் போதுமான பயிற்சியைப் பெற்ற விண்வெளி வீரர்கள். அவர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். இதனால் எந்த நேரத்திலும் எனக்கு அவர்கள் மீது பாவமோ அனுதாபமோ இல்லை.. மேலும், மக்களுக்கும் கூட அவர்கள் மீது அனுதாபம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
பாதுகாப்பாகவே இருந்தனர்
மேலும், அவர்களைப் பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதனால் கவலைப்பட எதுவும் இல்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். பிளான் ஏ தோல்வி அடைந்தபோது, பிளான் பி மூலம் வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். அதேநேரம் வரும் காலங்களில் விண்வெளிக்குச் சென்று திரும்புவது என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாக மாறினால்.. சர்வதேச விண்வெளி நிலையத்தில் எமர்ஜென்சிக்கு ஒரு ராக்கெட்டை வைத்திருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications